ஈழத் தமிழர்களை பாதுகாக்கக் கோரி டெல்லியில் பெரியார் திக பேரணி
டெல்லி: இலங்கையில் உள்ள தமிழர்கள் கண்ணியமாகவும், அமைதியாகவும் வாழ மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி பெரியார் திராவிடர் கழகம் சார்பில் டெல்லியில் இன்று பேரணி நடைபெற்றது.
இலங்கையில் உள்ள தமிழர்களை பாதுகாக்கக் கோரி டெல்லியில் பேரணி நடத்த பெரியார் திக தலைவர் கொளத்தூர் மணி தலைமையில் 500 தொண்டர்கள் ரயிலில் டெல்லி சென்றனர்.
இன்று காலை டெல்லி, ஜந்தர்மந்தர் அருகே அவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதில் கொளத்தூர் மணி, விடுதலை ராஜேந்திரன், பேராசிரியை சரசுவதி, கோவை ராமகிருஷ்ணன் ஆகியோர் பேசினார்.
கொளத்தூர் மணி பேசுகையில், தமிழர்களின் உணர்வுகளை மதித்து இலங்கை பயணத்தை பிரதமர் மன்மோகன் சிங் ரத்து செய்தது போல் ராணுவ உதவியையும் ரத்து செய்ய வேண்டும் என்றார்.
பின்னர் அனைவரும் நாடாளுமன்றத்தை நோக்கி பேரணியாக புறப்பட்டனர். ஆனால் நாடாளுமன்ற காவல் நிலையம் அருகே போலீசார் தடுத்து நிறுத்தினர்.
இன்று மாலை பிரதமர் மன்மோகன் சிங், மத்திய ராணுவ அமைச்சர் ஏ.கே.அந்தோணி ஆகியோரிடம் இலங்கை தமிழர்களை பாதுகாக்க 10 லட்சம் பேர் கையெழுத்திட்ட மனுவை வழங்கப் போவதாக கொளத்தூர் மணி தெரிவித்தார்.