9 ஆண்டுகளாக பஸ் வசதியே இல்லாத கிராமம்
தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே கடந்த 9 வருடங்களாக அரசு பஸ்களே வராமல் ஒரு கிராமம் பரிதவித்து வருகிறது.
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் அருகே உள்ளது சித்தவநாயக்கன்பட்டி கிராமம். இங்கு 500க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன. 1,500க்கும் மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.
கடந்த 1999ம் ஆண்டு இறுதிவரை விளாத்திகுளத்திலிருந்து 6 கிலோ மீட்டர் தொலைவில் உளள சித்தவவநாயக்கன்பட்டிக்கு தடம் எண் 106 என்ற டவுண் பஸ் இயக்கப்பட்டது.
இந்நிலையில் விளாத்திகுளம், சித்தவநாயக்கன்பட்டி, இடையே ரோடு வசதி சரியில்லை என்ற காரணத்திற்காக அந்த ஒரே பஸ்சும் நிறுத்தப்பட்டு விட்டது. இது தொடர்பாக நடவடிக்கை எடுக்க கோரி அப்பகுதி பொதுமக்கள் பலமுறை அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தும் எந்தவிதமான நடவடிக்கையும் இல்லை.
இதுகுறித்து சித்தவநாயக்கன்பட்டி பஞ்சாயத்து தலைவர் மீனாட்சி கூறும்போது, தூத்துக்குடி மாவட்டத்தில் பஸ் வசதியே இல்லாத கிராமங்கள் முற்றிலும் இல்லை என்று கலெக்டர் பழனியாண்டி கடந்த ஜனவரி 26ம் தேதி தெரிவித்துள்ளார்.
ஆனால் 9 வருடமாக நாங்கள் சிரமப்பட்டு வருகிறோம். இதனால் எங்கள் கிராம மக்களை திரட்டி போராட்டத்தில் ஈடுபடும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம் என்றார்.
மேலும் இப்பிரச்சனை தொடர்பாக பஞ்சாயத்து தலைவர் மற்றும் துணை தலைவர் தலைமையில் சுமார் 300 பெண்கள் கலெக்டரை சந்தித்து மனு கொடுத்தனர்.












Click it and Unblock the Notifications