மகரிஷி மகேஷ் யோகி மரணம்
தி ஹேக்: ஆழ்நிலை தியானத்தை மேற்கத்திய நாடுகளில் புகழ் பெறச் செய்த மகரிஷி மகேஷ் யோகி நெதர்லாந்தில் மரணமடைந்தார். அவருக்கு வயது 91.
மத்திய பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர் மகேஷ் யோகி. இமயமலைச் சாரலில் ஆசிரமம் நடத்தி ஆழ்நிலை தியானத்தை போதித்து வந்தார். இவரது ஆசிரமத்திற்கு 1968ம் ஆண்டு அப்போது உலகப் புகழ் பெற்ற பீட்டில்ஸ் இசைக் குழுவினர் இங்கு வந்து ஆழ்நிலை தியானத்தைக் கற்றுக் கொண்டனர். இதைத் தொடர்ந்து மகேஷ் யோகி உலகப் புகழ் பெற்றார்.
1955 ம் ஆண்டு முதல் ஆழ்நிலை தியானத்தை போதித்து வந்தார் யோகி. அமெரிக்காவுக்கு 1959ம் ஆண்டு இந்த தியானத்தை அறிமுகப்படுத்தினார். ஆனால் பீட்டில்ஸ் குழுவினர் வந்த பிறகுதான் யோகியின் பெருமையும், புகழும் மேற்கத்திய நாடுகளில் வெகு வேகமாக பரவியது.
நெதர்லாந்து நாட்டின் விலோடிராப் நகரில் வசித்து வந்த யோகி, நேற்று மரணமடைந்தார். அவருக்கு வயது 91. தூக்கத்திலேயே அவர் இறந்து விட்டார்.
அவரது மரணச் செய்தியை யோகியின் செய்தித் தொடர்பாளர் பாப் ராத் அறிவித்தார். உள்ளூர் நேரப்படி இரவு 7 மணிக்கு யோகி மரணமடைந்தார்.
உலகம் முழுவதும் யோகியின் ஆழ்நிலை தியான மையங்கள், கல்வி நிறுவனங்கள் உள்ளிட்டவை பரவலாக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.











Click it and Unblock the Notifications