கரூரில் பாகிஸ்தான் வியாபாரியால் பரபரப்பு
கரூர்: கரூருக்கு வியாபார விஷயமாக வந்த பாகிஸ்தானைச் சேர்ந்த வியாபாரியால் பெரும் பரபரப்பும், குழப்பமும் ஏற்பட்டது. அவரை உடனடியாக பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பி வைக்க மத்திய புலனாய்வுப் பிரிவு போலீஸார் முடிவு செய்துள்ளனர்.
பாகிஸ்தானின் கராச்சி நகரைச் சேர்ந்தவர் முகம்மது அப்ரிடி ஹபீஸ். இவர் வியாபார விஷயமாக கடந்த 4ம் தேதி கரூருக்கு வந்தார். அவருடன் டெல்லியைச் சேர்ந்த வியாபாரிகள் பிரியதர்ஷன், அகர்வால் ஆகியோரும் வந்தனர்.
மத்திய வெளியுறவு அமைச்சக விதிமுறைப்படி, கரூர் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகத்தில் தனது வருகை குறித்தும், தன்னைப் பற்றிய விவரங்களையும் அப்ரிடி தெரிவித்து பதிவு செய்தார்.
பின்னர் மூன்று பேரும் ஹோட்டலில் தங்கினர். இந்த நிலையில் அன்று மாலை அப்ரிடி வெளியில் போனார். ஆனால் மீண்டும் திரும்பி வரவில்லை. இதனால் குழப்பமடைந்த அகர்வாலும், பிரியதர்ஷனும் போலீஸில் தெரிவித்தனர்.
பாகிஸ்தானைச் சேர்ந்தவர் என்பதால் போலீஸார் படு வேகமாக நடவடிக்கையில் இறங்கி துரிதமாக அவரைத் தேடி வந்தனர். இந்த நிலையில் 5ம் தேதி மதியம், கரூர் பஸ் நிலையத்தில் அப்ரிடி மயங்கி நிலையில் கண்டுபிடிக்கப்பட்டார்.
உடனடியாக அவரை மீட்ட போலீஸார் மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை அளித்தனர். சிகிச்சைக்குப் பின்னர் அவர் சுய நினைவை அடைந்தார். அவரிடம் மத்திய குற்றப் புலனாய்வு போலீஸார் விசாரணை நடத்தினர். அவரிடம் போலீஸார் விசாரித்தபோது, தான் காரில் போனதாகவும், அதன் பின்னர் என்ன நடந்தது என்று தெரியவில்லை என்றும் தெரிவித்தார்.
மேலும் அவர் முன்னுக்குப் பின் முரணாகவும் பேசினார். இதனால் குழப்பமடைந்த போலீஸார், அப்ரிடியை உடனடியாக பாகிஸ்தானுக்கு திருப்பி அனுப்பி வைக்க முடிவு செய்துள்ளனர்.
மேலும் அப்ரிடி கரூரில் யார் யாரைத் தொடர்பு கொண்டார் என்பது குறித்தும் போலீஸார் தீவிர விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
பாகிஸ்தான் வியாபாரியால் ஏற்பட்ட குழப்பத்தால் காவல்துறையும் பரபரப்பாகி விட்டது.