கொழும்பில் தமிழ் வர்த்தகர் சுட்டுக் கொலை
கொழும்பு கொட்டாஞ்சேனை என்ற இடத்தில் நேற்று இரவு இந்த சம்பவம் நடந்துள்ளது. கொட்டாஞ்சேனையில் உள்ள வீரமைலன் திருமண மண்டபத்தின் உரிமையாளரான குழந்தைவேலு வீரசுப்பிரமணியம் (54), கொழும்பைச் சேர்ந்த பிரபல தமிழ் வர்த்தகர்களில் ஒருவர்.
கொட்டாஞ்சேனை லூசியஸ் தேவாலயத்திற்கு முன்பாக உள்ள வீதியில் தனது மனைவி உமாதேவியுடன் (43) அவர் காரில் வந்து கொண்டிருந்தார். அப்போது இவர்கள் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
துப்பாக்கியால் சுட்ட மர்ம நபர்கள் இருளைப் பயன்படுத்தி அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.
இந்த துப்பாக்கிச் சூட்டில் சுப்ரமணியத்தின் கார் கண்ணாடிகள் சிதறின. துப்பாக்கிச் சூடு நடந்த இடத்தில் 6 தோட்டாக்கள் சிதறிக் கிடந்தன என்று போலீஸார் தெரிவித்துள்ளனர்.
துப்பாக்கிச் சூட்டில் படுகாயமடைந்த இருவரும் உடனடியாக தேசிய மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டனர். வழியிலேயே சுப்ரமணியம் உயிரிழந்தார். உமாதேவி ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
சுப்ரமணியம்-உமா தேவி தம்பதிக்கு 3 குழந்தைகள் உள்ளனர்.
யாழ்ப்பாணம் புங்குடுதீவைச் சேர்ந்த சுப்ரமணியம், விடுதலைப் புலிகளுக்கு ஆதரவாக இருந்தவர். இதற்காக கடந்த 2004ம் ஆண்டு அவர் கைது செய்யப்பட்டு ஒன்றரை வருடம் சிறையில் அடைக்கப்பட்டார். விடுதலையாகி வந்த பின்னரும் கூட தீவிர புலிகள் ஆதரவாளராக திகழ்ந்தார்.
கடும் சண்டை:
இதற்கிடையே, பாலைக்குழி, அடம்பன் பகுதிகளில் நடந்த கடும் சண்டையில் 21 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டதாக விடுதலைப் புலிகள் தெரிவித்துள்ளனர்.
மன்னார் அடம்பன் பகுதிகளில் நடந்த கடும் சண்டையில் 21 வீரர்கள் கொல்லப்பட்டதாகவும், 20 பேர் காயமடைந்ததாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.
பாலைக்குழியில் இருந்து அடம்பன் நோக்கி சென்ற இலங்கை வீரர்களின் முயற்சியை தகர்த்து முறியடித்து விட்டதாகவும் புலிகள் தெரிவித்துள்ளனர்.