For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வெளியூர்க்காரர்களை பார்சல் செய்து அனுப்புவோம்: உத்தவ் தாக்கரே

By Staff
Google Oneindia Tamil News

மும்பை: ராஜ்தாக்கரேக்கு நாங்கள் சற்றும் சளைத்தவர்கள் அல்ல என்பதை நிரூபிப்பது போல வெளியூர்க்காரர்கள் மும்பை விமான நிலைய மேம்பாட்டுப் பணிகளில் வேலைக்கு நியமிக்கப்பட்டால் அவர்களை பார்சல் செய்து சரக்கு விமானத்தில் ஏற்றி அனுப்புவோம் என சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் மகனும், கட்சியின் செயல் தலைவருமான உத்தவ் தாக்கரே காட்டமாக கூறியுள்ளார்.

ஒரே குட்டையில் ஊறிய மட்டைகள் என்று பெரியார் முன்பு கூறுவார். அதை நிரூபிப்பது போல வெளிமாநிலத்தவர்கள் மீதான விஷம் கக்குதலில் பால் தாக்கரேவின் மருமகன் ராஜ் தாக்கரேவும், மகன் உத்தவ் தாக்கரேவும் பேச ஆரம்பித்துள்ளனர்.

வட இந்தியர்களை படு காட்டமாக விமர்சித்து, இந்தி பேசுவோரின் ஒட்டுமொத்த எதிர்ப்பை சம்பாதித்தார் ராஜ் தாக்கரே. அவரது கட்சியினர் மும்பை உள்ளிட்ட நகரங்களில் வட மாநிலத்தவர்களைக் குறி வைத்து வன்முறையிலும் இறங்கினர்.

இந் நிலையில், சிவசேனா தலைவர் பால் தாக்கரேவின் மகனும், சிவசேனா செயல் தலைவருமான உத்தவ் தாக்கரே, வெளியூர்க்காரர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

சிவசேனா கட்சியின் பாரதிய காம்கார் சேனா பிரிவின் கூட்டம் மும்பை விமான நிலையத்தில் நடந்தது. இதில் கலந்து கொண்டு உத்தவ் பேசுகையில், மும்பை விமான நிலைய விரிவாக்கப் பணிகளுக்கு ஒரு லட்சம் தொழிலாளர்கள் தேவைப்படுகின்றனர். இந்த வேலைகளை மராத்தியர்களுக்கே வழங்க வேண்டும்.

பிற மாநிலத்தவரை இந்த வேலையில் அமர்த்தக் கூடாது. இதனால் மராத்தியர்களின் குடும்பங்களுக்குப் பாதிப்பு ஏற்படும்.

வெளி மாநிலத்தவர்களை வேலையில் அமர்த்த முயன்றால் அவர்களை பார்சல் செய்து சரக்கு விமானம் மூலம் திருப்பி அனுப்புவோம்.

வளர்ச்சிக்கு நாங்கள் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. ஆனால் எங்களது தொழிலாளர்களின் குடும்பங்களை பட்டினியில் தள்ளும் வளர்ச்சித் திட்டங்களை நாங்கள் ஏற்க மாட்டோம்.

சிவசேனா பெரும் போராட்டம் நடத்திய பிறகே மும்பை விமான நிலையத்துக்கு சத்ரபதி சிவாஜி மகாராஜின் பெயர் சூட்டப்பட்டது. இங்கே மராத்தியில் பெயர்ப் பலகை வைக்கப்பட வேண்டும். மும்பைக்கு வருகிறவர்களை மராத்தி பெயர்ப் பலகைதான் வரவேற்க வேண்டும் என்றார் உத்தவ் தாக்கரே.

பின்னர் ராஜ்தாக்கரேவை மறைமுகமாக குறிப்பிட்டு, மராத்தி மக்களுக்கு யார் அசல், யார் நகல் என்பது நன்றாகவே தெரியும். மராத்தி மக்களுக்கும், சிவசேனாவுக்கும் இடையே பிரிக்க முடியாத பந்தம் உள்ளது. அதுதான் சிலருக்கு எரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில நாட்களுக்கு முன்பு நடந்த சம்பவங்கள் இதன் வெளிப்பாடுதான் என்றார் உத்தவ்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X