ஜெயலலிதா எம்ஜிஆர் வாரிசா?..ராதிகா பாய்ச்சல்
மதுரை: எம்ஜிஆருடன் நடித்துவிட்டால் மட்டும் அவரது வாரிசாகிவிட முடியாது என ஜெயலலிதாவை மறைமுகமாக சாடினார் ராதிகா சரத்குமார். அதே நேரத்தில் சரத்குமாரை மக்கள் எம்ஜிஆராக பார்ப்பதாகவும் கூறியுள்ளார்.
சரத்குமாரின் அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சியின் முதலாவது மாநில மாநாட்டில் அவரது மனைவி நடிகை ராதிகா பேசுகையில்,
மதுரை பல முக்கிய நிகழ்வுகளை, திருப்பங்களை ஏற்படுத்திய நகரம். அந்த மதுரையில் இந்த மாநாடு நடக்கிறது. தமிழகத்திற்குத் தேவையான மாற்றத்தை சரத்குமார் கொடுப்பார்.
சரத்குமாரை இன்னொரு எம்.ஜி.ஆராக மக்கள் பார்க்கின்றனர். நான் வாரிசு பிரச்சினை குறித்துப் பேச வரவில்லை. எம்.ஜி.ஆருடன் நடித்ததால் மட்டும் அவரது வாரிசு என்று யாரும் (ஜெயலலிதா) கூறிக் கொள்ள முடியாது. அப்படிச் சொல்வது சிறுபிள்ளைத்தனமானது.
நான் கூடத்தான் என்.டி.ராமாராவ், ரஜினி ஆகியோருடன் நடித்துள்ளேன். அதற்காக நான் அவர்களின் வாரிசு என்று கூறிக் கொள்ள முடியுமா?
எம்.ஜி.ஆர். சூழ்நிலை அறிந்து உதவி செய்யும் மன பக்குவம் கொண்டவர். ஒருமுறை எனது படத்தை திரையிட விடாமல் தடுக்க சிலர் முயற்சித்தனர். அப்போது அவர்தான் தலையிட்டு, எதிர்ப்பு தெரிவித்தவர்களை விட்டே, எனது படத்தை திரையிடுமாறு கூறினார்.
நாங்கள் மக்களுக்கு உண்மையாக இருக்க நினைத்தோம். அப்படி நினைத்தால் மற்ற கட்சிகளில் இருக்க முடியாது. எனவேதான் இந்தக் கட்சியை சரத்குமார் தொடங்கியுள்ளார்.
மாணவர்கள் நாட்டுக்கு நல்லது செய்யும் சக்தி கொண்டவர்களாக இருக்க வேண்டும். அந்த சக்தியைக் கொடுக்கும் கட்சியாக அகில இந்திய சமத்துவ மக்கள் கட்சி இருக்கும்.
பெண்களுக்கு நாடாளுமன்றம், சட்டசபைகளில் 33 சதவீத இட ஒதுக்கீடு வழங்குவது குறித்துப் பேசிக் கொண்டேதான் இருக்கின்றனர். இதுதொடர்பான சட்டத்தை உடனடியாக கொண்டு வர வேண்டும் என்றார் ராதிகா.