மோசடி வழக்கில் தேமுதிக கவுன்சிலர் கைது
புதுக்கோட்டை: பண மோசடி வழக்கில் புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி பேரூராட்சி தேமுதிக கவுன்சிலர் கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டார்.
ஆலங்குடி பேரூராட்சியில் உறுப்பினராக இருப்பவர் கிருஷ்ணமூர்த்தி. நேற்று பேரூராட்சிக் கூட்டம் நடந்தது. கூட்டம் முடிந்து வெளியே வந்தபோது போலீஸார் கிருஷ்ணமூர்த்தியைக் கைது செய்தனர்.
இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
கிருஷ்ணமூர்த்தி கைது செய்யப்பட்டது குறித்து போலீஸ் தரப்பில் கூறுகையில், ஆலங்குடியைச் சேர்ந்த பன்னீர் செல்வம் என்பவர் வட்டிக்குப் பணம் கொடுக்கும் தொழிலை செய்து வருகிறார். இவரிடம் சென்னை பொன்னேரியைச் சேர்ந்த ரமேஷ் என்பவர் பன்னீர் செல்வத்திடம் கடன் வாங்குவதற்காக கடந்த டிசம்பரம் மாதம் ஆலங்குடிக்கு வந்தார்.
முதலில் கிருஷ்ணமூர்த்தியை ரமேஷ் அணுகினார். பன்னீர் செல்வத்திடம் தான் பணம் வாங்கித் தருவதாக கூறிய கிருஷ்ணமூர்த்தி அதற்காக ரமேஷிடம் கமிஷன் பெற்றுள்ளார். பின்னர் பன்னீர் செல்வத்திடம் கடன் தொகையைப் பெற்றார்.
இந்த நிலையில் தனக்குத் தெரிந்த போலீஸாரான நீலமேகம், குடிமைநாதன், கோபால் ஆகியோருக்கு போன் செய்த பன்னீர் செல்வம், ரமேஷிடம் ஏராளமான பணம் இருப்பதாக தெரிவித்தார்.
இதையடுத்து ரமேஷை வளைத்துப் பிடித்த அந்த மூன்று போலீஸாரும், அவரிடம் இருப்பது கருப்புப் பணம் என்று கூறி அவற்றைப் பறித்துக் கொண்டனர்.
அதிர்ச்சி அடைந்த ரமேஷ் மாவட்ட எஸ்.பி. கபில் குமார் சரத்கரிடம் புகார் கொடுத்தார். இதையடுத்து குற்றவாளிகளைப் பிடிக்க போலீஸ் படை அமைக்கப்பட்டது.
இந்தப் படையின் தீவிர விசாரணையில், முதலில் மூன்று போலீஸாரும் கைது செய்யப்பட்டனர். இந்த நிலையில் தற்போது கிருஷ்ணமூர்த்தியைக் கைது செய்துள்ளனர்.