கடத்தப்படும் விமானங்களை சுட்டு வீழ்த்த இந்தியா திட்டம்?
டெல்லி: தீவிரவாதிகளின் விமானக் கடத்தலைத் தடுக்க, கடத்தப்பட்ட விமானத்தை சுட்டு வீழ்த்தலாமா என்பது குறித்து மத்திய அமைச்சரவை ஆலோசனை நடத்தியுள்ளது.
இந்தியாவில் விமானத்தை கடத்தி சதி செயல்களில் ஈடுபட தீவிரவாதிகள் தொடர்ந்து முயற்சித்து வருகின்றனர். இது தொடர்பாக மத்திய உளவுப் பிரிவு மத்திய அரசை அடிக்கடி எச்சரிப்பதும், விமான நிலையங்களில் பாதுகாப்பு பலப்படுத்தப்படுவதும் நடந்து வருகிறது.
இந் நிலையில் சமீபத்தில் விமானக் கடத்தலுக்கு திட்டமிட்ட உல்பா தீவிரவாதிகளும், அவர்களுக்கு உதவிய ஏர்-டெக்கான் நிறுவன ஊழியரும் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து விமானக் கடத்தல்காரர்களுக்கு கடுமையான தண்டனை வழங்க வேண்டும் என்று விமான போக்குவரத்து துறை மத்திய அரசுக்கு பரிந்துரை செய்தது.
விமானக் கடத்தல்காரர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்கவே சட்டத்தில் இடம் உள்ளது. இதை மரண தண்டனையாக உயர்த்த வேண்டும் என்று பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
மேலும் கடத்தப்படும் விமானத்தை வைத்து கட்டிடங்களில் மோதி உயிர்ச்சேதம் உருவாக்க தீவிரவாதிகள் முயலலாம் என்பதால், கடத்தப்படும் விமானத்தை ஏவுகணைகளைக் கொண்டு சுட்டு வீழ்த்தி விட வேண்டும் என்றும் விமானத்துறை பரிந்துரைத்துள்ளது.
இந்தக் கூட்டத்திற்குப் பின் நிருபர்களிடம் பேசிய அமைச்சர் பிரியரஞ்சன் தாஸ் முன்ஷி,
விமான கடத்தல் போன்ற குற்றங்களில் ஈடுபடுவோருக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் சட்டத் திருத்தம் கொண்டு வர திட்டமிடப்பட்டுள்ளது. மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதித்து, ஒப்புதல் பெறப்பட இருந்தது. ஆனால், விமானப் போக்குவரத்துத் துறை அமைச்சர் இந்தக் கூட்டத்தில் கலந்து கொள்ளாததால், அந்த விவாதம் ஒத்திவைக்கப்பட்டுவிட்டது.
இந்தியா வழியாக ஆசிய சாலை:
ஆசிய நாடுகளை சாலை வழியே இணைக்கும் வகையில், இரு வழித் தடங்களை இந்தியா வழியாக அமைக்க ஐ.நாவின் ஆசிய பசிபிக் பொருளாதார மற்றும் சமூக இயக்குனரகத்திடம் பரிந்துரைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
இதன்படி பூட்டான்-இந்தியா-வங்தேசம் மற்றும் நேபாளம்-இந்தியா ஆகிய இரு வழித் தடங்கள் உருவாகும். மொத்தம் 1.40 கி.மீ கொண்ட ஆசிய நெடுஞ்சாலையில், இந்தியாவில் மட்டும் 12,000 கி.மீ. நெடுஞ்சாலை அமையவுள்ளது. இது தொடர்பாக 32 நாடுகளுக்கிடையே ஒப்பந்தம் ஏற்பட்டுள்ளது என்றார் முன்ஷி.












Click it and Unblock the Notifications