யாத்திரைகள் நடத்தும் இல.கணேசன், ராஜா, ராதாகிருஷ்ணன், திருநாவுக்கரசர்
சென்னை: தமிழகத்தில் பாஜகவை வலுப்படுத்த இல.கணேசன், எச்.ராஜா, பொன். ராதாகிருஷ்ணன், திருநாவுக்கரசர் ஆகியோர் வாகன யாத்திரைகள் நடத்தவுள்ளனர்.
தமிழக பாஜக தலைவர் இல.கணேசனின் 64வது பிறந்த நாள் விழா இன்று கொண்டாடப்பட்டது. கட்சி தலைமை அலுவலகமான கமலாலயத்தில் நடந்த விழாவில் கட்சி நிர்வாகிகள் அவருக்கு மாலை, சால்வைகள் அணிவித்து இனிப்பு வழங்கினர்.
அப்போது கணேசன் நிருபர்களிடம் கூறியதாவது:-
மலேசியாவில் இந்துக்கள் தொடர்ந்து தாக்கப்படுகிறார்கள். அங்கு இந்து பண்பாட்டை வளர்த்த ஆர்.எஸ்.எஸ். தொண்டர் ரமாஜி மற்றும் 300 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பல ஆண்டுகளாக அங்கு வாழ்ந்து வரும் இந்தியர்களுக்கு மனித உரிமை மறுக்கப்பட்டுள்ளது.
கட்சியின் மாநில செற்குழுக் கூட்டம் திருத்தணியில் மார்ச் 7, 8ம் தேதிகளில் நடக்கிறது.
கட்சியை பலப்படுத்த தமிழ்நாடு முழுவதும் பிரசார யாத்திரை நடத்தப்பட உள்ளது. சேலத்தில் இருந்து 2ம் தேதி என் தலைமையிலும், நீலகிரியில் இருந்து எச்.ராஜா தலைமையிலும் யாத்திரை புறப்படும். 5ம் தேதி பொன். ராதாகிருஷ்ணன் தலைமையில் வால்பாறையில் இருந்தும், 14ம் தேதி திருநாவுக்கரசர் தலைமையில் சென்னை புறநகரில் இருந்தும் யாத்திரை தொடங்கும்.
பாதுகாப்பு காரணங்களுக்காக அடுத்த மாதம் அத்வானி சென்னை வருவது ஒத்திவைக்கப்பட்டுள்ளது என்றார்.