வரதட்சணை:லண்டனுக்கு தப்ப முயன்ற சாப்ட்வேர் என்ஜீனியர் கைது
சென்னை: வரதட்சணைக் கொடுமை வழக்கில் தப்பி தலைமறைவாக இருந்து வந்த சாப்ட்வேர் என்ஜீனியர் லண்டனுக்கு தப்பிச் செல்ல முயன்றபோது விமான நிலையத்தில் பிடிபட்டார்.
சென்னை விமான நிலையத்தில் இருந்து நேற்று முன்தினம் ஜெர்மனுக்கு ஒரு விமானம் செல்ல இருந்தது. அதில் ஏற சென்னை தேனாம்பேட்டையை சேர்ந்த சின்னதுரை பூவேந்திரன் (வயது 35) என்பவர் வந்தார். இவரது பாஸ்போர்டை குடியுரிமை அதிகாரிகள் சோதனையிட்டனர்.
அப்போது சின்னத்துரை மும்பையில் வரதட்சணைக் கொடுமை வழக்கில் தேடப்பட்டு வரும் குற்றவாளி என்பது தெரிய வந்தது. இதையடுத்து அவரை விமான நிலைய போலீஸாரிடம் குடியுரிமைப் பிரிவு அதிகாரிகள் ஒப்படைத்தனர்.
சின்னத்துரை சாப்ட்வேர் என்ஜீனியர். மும்பையில் சோனியா என்ற பெண்ணை காதலித்து திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவர் மீது சோனியா வரதட்சணை கேட்டு கொடுமைப்படுத்தியதாக போலீஸில் புகார் கொடுத்தார்.
இதையடுத்து கைதாகாமல் தப்ப சின்னத்துரை அங்கிருந்து தப்பி சென்னைக்கு வந்து விட்டார். லண்டன் செல்ல விமான நிலையம் வந்தபோது சிக்கிக் கொண்டார். அவரிடம் போலீஸார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.