உள்ளாட்சி இடைத் தேர்தல் திமுக கூட்டணி வெற்றி
சென்னை: தமிழகம் முழுவதும் நடந்த உள்ளாட்சி இடைத் தேர்தலில் திமுக கூட்டணிக்கே அதிக அளவிலான வார்டுகள் கிடைத்துள்ளன.
தமிழகத்தில் காலியாக இருந்த 482 இடங்களுக்கு இடைத் தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதில் 217 இடங்களுக்கு போட்டியின்றி பிரதிநிதிகள் தேர்வு செய்யப்பட்டனர்.
மற்ற இடங்களுக்கு கடந்த 20ம் தேதி தேர்தல் நடந்தது.
கட்சி அடிப்படையில், 2 மாவட்ட ஊராட்சி வார்டுகள், 15 ஊராட்சி ஒன்றிய வார்டுகள், கட்சி அடிப்படை இல்லாமல் 23 கிராம ஊராட்சித் தலைவர்கள், 157 கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் பதவிகளுக்கு தேர்தல் நடந்தது.
நகர்ப்புறங்களில் மின்னணு வாக்குப் பதிவு நடந்தது. கிராமப் பகுதிகளில் வாக்குச் சீட்டு முறையில் தேர்தல் நடந்தது.
இந்த தேர்தலில் பதிவான வாக்குகள் நேற்று எண்ணப்பட்டன. இதில் திமுக கூட்டணியைச் சேர்ந்த வேட்பாளர்களே பெருவாரியாக வெற்றி பெற்றுள்ளனர் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
சரத்குமாரின் அகில இந்திய சமுத்துவ மக்கள் கட்சி தூத்துக்குடி மாவட்டம் சாயர்புரத்தில் ஒரு வார்டில் வென்று தனது அரசியல் கணக்கை துவக்கியுள்ளது.