கோவையில் ரோந்து போலீஸாரை தாக்கி துப்பாக்கி கொள்ளை
கோவை: கோவையில் ரோந்து சென்ற போலீஸாரைத் தாக்கி அவர்கள் வைத்திருந்த ரிவால்வரை 10 பேர் கொண்ட கும்பல் பறித்துச் சென்றதால் கோவையில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் துப்பாக்கிகளும், வாக்கிடாக்கியும் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த சம்பவத்திற்கு போலீசே காரணமா அல்லது நக்ஸல்கள் உள்பட வேறு யாராவது காரணமா என்பது இன்னும் தெளிவாகவில்லை.
இந் நிலையில் கோவையைச் சேர்ந்த 2 போலீஸ்காரர்கள் துப்பாக்கியை பறிகொடுத்த சம்பவம் நடந்துள்ளது.
கோவை சாய்பாபா நகர் காவல் நிலையத்தைச் சேர்ந்த இரு காவலர்கள் நேற்று இரவு ரோந்துப் பணிக்குச் சென்றனர். பாரதி பூங்கா பகுதியில் அவர்கள் சென்றபோது பூங்காவுக்கு உள்ளே விளக்குகள் எரிவதைப் பார்த்தனர்.
வாட்ச்மேனைக் கூப்பிட்டபடியே அவர்கள் உள்ளே சென்றபோது, திடீரெ 10 பேர் கொண்ட கும்பல் அவர்களை மடக்கியது.
பின்னர் பூங்காவில் இருந்த ஒரு அறையில் வைத்து அவர்கள் கை, கால்களைக் கட்டினர். பிறகு போலீஸாரிடமிருந்த ஒரு ரிவால்வரை பறித்துக் கொண்டு அக்கும்பல் தப்பி விட்டது.
இந்த சம்பவம் கோவையில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. துப்பாக்கியை திருடிச் சென்றது திருடர்களா, தீவிரவாதிகளா அல்லது சந்தனக் கடத்தல்கார்களா என்று போலீஸார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.