காவல் நிலையத்தில் காதலர்களைக் கொல்ல முயற்சி-2 பேர் கைது
சென்னை: சென்னை அருகே பொன்னேரி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்த காதல் ஜோடியை கத்தியால் குத்தப் பாயந்த 2 பேரை போலீஸார் மடக்கிப் பிடித்துக் கைது செய்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
சென்னை புதுவண்ணாரப்பேட்டை சிவன் நகரைச் சேர்ந்தவர் சக்திவேலு. இவரது மகள் லாவண்யா (21). சக்திவேலு தொழிற்சாலை நடத்தி வருகிறார். அதில் லாவண்யா பணி புரிந்து வருகிறார்.
இந்த நிலையில் பொன்னேரி பாலாஜி நகரில் வசிக்கும் லோகேஷ்குமார் என்பவர் அதே நிறுவனத்தில், வேலைக்கு சேர்ந்தார். அப்போது இருவருக்கும் காதல் ஏற்பட்டது. 2 வருடமாக காதலித்து வருகிறார்கள்.
இந்தக் காதலுக்கு வழக்கம் போல எதிர்ப்பு கிளம்பியது. இரு வீட்டாரும் காதலுக்கு பச்சைக் கொடி காட்ட மறுத்து விட்டனர். இதனால் கடந்த வாரம் காதலர்கள் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி பதிவுத் திருமணம் செய்து கொண்டனர். பின்னர் தங்களது நண்பர் வீட்டில் தங்கினர்.
இந்த நிலையில் காதல் கணவன் லோகேஷ்குமாருடன், பொன்னேரி காவல் நிலையத்தில் தஞ்சமடைந்தார் லாவன்யா. மேலும் தனது பெற்றோருக்குப் போன் செய்து லோகேஷுடன் தான் இருப்பதாகவும், திருமணமாகி விட்டதாகவும் தகவல் தெரிவித்தார்.
இதைக் கேட்டு ஆத்திரமடைந்த சக்திவேல், தனது மகன் சங்கருடன் பொன்னேரி விரைந்தார். அங்கு லாவன்யாவை அவர்கள் தேடினர். ஆனால் கிடைக்கவில்லை. இதையடுத்து போலீஸில் புகார் செய்யலாம் என காவல் நிலையம் சென்றனர்.
அங்கு லோகேஷுடன், லாவன்யா அமர்ந்திருந்தார். இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த தந்தையும், மகனும், லாவன்யாவை நோக்கி கத்தியுடன் பாய்ந்தனர்.
இதை எதிர்பார்க்காத போலீஸார் அதிர்ச்சி அடைந்தனர். இருப்பினும் சட்டென சுதாரித்த இன்ஸ்பெக்டர் திருநாவுக்கரசு, எஸ்.ஐ மதியரசன் மற்றும் போலீஸார் குறுக்கே பாய்ந்து இருவரையும் மடக்கிப் பிடித்தனர்.
ஆனால் அவர்களிடமிருந்து தப்பிய இருவரும் வெளியே ஓடினர். ஆனால் விடாமல் போலீஸார் துரத்தினர். அப்போது அருகில் இருக்கும் நீதிமன்றத்திற்குள் புகுந்து இருவரும் தப்ப முயன்றனர். இருந்தாலும் போலீஸார் விடாமல் துரத்தினர்.
பின்னர் ஒரு வழியாக இருவரையும் போலீஸார் மடக்கிப் பிடித்து இருவரையும் கைது செய்தனர்.












Click it and Unblock the Notifications