பனியன் நிறுவனத்தில் தீ: ரூ.10 லட்சம் சேதம்
திருப்பூர்: திருப்பூர் அருகே பனியன் நிறுவனத்தில் ஏற்பட்ட பெரும் தீவிபத்தில் ரூ. 10 லட்சம் அளவுக்கு சேதம் ஏற்பட்டது.
திருப்பூர் மங்கலம் சாலையில், சித்தார்த்தன், பாலு ஆகியோர் பனியன் நிறுவனம் நடத்தி வருகின்றனர். நேற்று இரவு வேலை முடிந்து நிறுவனத்தைப் பூட்டி விட்டு அனைவரும் கிளம்பினர்.
நள்ளிரவு 2.30 மணியளவில் பனியன் நிறுவனத்திலிருந்து குபுகுபுவென புகை வந்துள்ளது. இதைப் பார்த்த அக்கம் பக்கத்தினர் தீயணைப்பு நிலையத்திற்குத் தகவல் கொடுத்தனர். விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள், தீயை அணைக்க முயன்றனர்.
பனியன் நிறுவனம் முழுவதும் பற்றி எரிந்த தீயால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. மேலும் ஒரு தீயணைப்பு நிலையத்தைச் சேர்ந்த வீரர்கள் வரவழைக்கப்படடு அனைவரும் சேர்ந்து 2 மணி நேரம் போராடி தீயை அணைத்தனர்.
விபத்தில் ரூ. 10 லட்சம் மதிப்புள்ள துணி பண்டல்கள், கட்டிங் மேஜைகள், ரேக்குகள், அயர்னிங் மேஜைகள் உள்ளிட்டவை சேதமடைந்தன.
மின் கசிவால் தீவிபத்து ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.