பழனி கோவில் நிலத்தை வாங்கிய சேதுபதி வீட்டை ‘சுத்து’ போட்ட சிபிசிஐடி.. தலைமறைவானவரை பிடிக்க தீவிரம்!
திண்டுக்கல்: பழனியில் ரூ.100 கோடி மதிப்புள்ள கோயில் நிலம் முறைகேடு வழக்கில், நிலத்தை விற்ற முருகதாஸ் சாமிகள், வாங்கிய சேதுபதி, வெள்ளத்துரை ஆகிய மூவரும் தலைமறைவாகியுள்ளனர். தலைமறைவான மூவரையும் பிடிக்க சிபிசிஐடி போலீசார் தீவிரம் காட்டி வருகின்றனர். பழனியில் சேதுபதி வீட்டில் சிபிசிஐடி போலீசார் சோதனை நடத்தி வருகின்றனர்.
பழனி மலை அடிவாரத்தில் உள்ள தண்டபாணி சுவாமிகள் மடத்துக்குச் சொந்தமான ரூ.100 கோடி மதிப்புள்ள 1.40 ஏக்கர் நிலம் முறைகேடாக பத்திரப்பதிவு செய்யப்பட்டது தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், நிலத்தை விற்பனை செய்தவர், வாங்கியவர்கள் என 4 பேர் மீது பழனி அடிவாரம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர்.

இந்த விவகாரம் தொடர்பாக சார் பதிவாளர் ஜஸ்டின் மணிகண்டன், மாவட்ட பதிவாளர் சசிகலா ஆகியோர் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். பத்திரப் பதிவையும் உயர் நீதிமன்றம் ரத்து செய்தது. மேலும், வழக்கு விசாரணை சிபிசிஐடிக்கு மாற்றப்பட்டது. இதையடுத்து, சிபிசிஐடி டிஎஸ்பி அஜய் தங்கம் தலைமையிலான குழுவினர் விசாரணையைத் தொடங்கி, தேவஸ்தானம் மற்றும் பத்திரப்பதிவு அலுவலகத்தில் விசாரித்தனர்.
நேற்று திண்டுக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் பழனி தேவஸ்தான நிலப்பிரிவு கண்காணிப்பாளர் முருகானந்தம், வழக்குப் பிரிவு கண்காணிப்பாளர்கள் சிவனேசன், கணபதி, வட்டாட்சியர் (ஓய்வு) மாரியப்பன், கிராம நிர்வாக அலுவலர் (ஓய்வு) சின்னசாமி ஆகிய 5 பேரிடம் எஸ்பி சாஜிதா விசாரணை நடத்தினார்.
இதேபோல, பத்திரப்பதிவு அலுவலகத்தில் மற்றொரு குழுவினர் ஆய்வு செய்து சிசிடிவி வீடியோ பதிவுகளைப் பெற்றுக்கொண்டனர். கிடுக்கிப்பிடி விசாரணையால் தேவஸ்தானம் மற்றும் பத்திரப் பதிவுத் துறை அதிகாரிகள், பணியாளர்கள் பலர் கலக்கத்தில் உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் நிலத்தை விற்ற திருப்புகழ் சுவாமிகள், முருகதாஸ் சுவாமிகள் மற்றும் தண்டபாணி சுவாமிகள் அறக்கட்டளையைச் சேரந்த முருகதாஸ், நிலத்தை வாங்கிய உடுமலைப்பேட்டை பாப்பான்குளத்தைச் சேர்ந்த வெள்ளைத்துரை மற்றும் பழநி டி.கே.என்.புதூரைச் சேர்ந்த சேதுபதி ஆகியோர் தலைமறைவாகியுள்ளனர். அவர்கள் தங்கள் செல்போன்களை ஸ்விட்ச் ஆப் செய்து வைத்திருப்பதும் விசாரணையில் தெரியவந்தது.
மேலும் பத்திரப்பதிவு நாளில் சாட்சி கையெழுத்து போட்டவர்களும் தலைமறைவாகி உள்ளனர். இவர்களைத் தேடும் பணி நடந்து வருகிறது. முறைகேடாக கோயில் நிலத்தை விற்றவர், வாங்கியவர்கள் புகைப்படத்தை வெளியிட வேண்டும் என அரசியல் கட்சியினர் உள்பட பலரும் வலியுறுத்தி வரும் நிலையில், நிலத்தை விற்ற முருகதாஸ், வாங்கிய சேதுபதி ஆகியோரது புகைப்படமும் வெளியாகியுள்ளது.












Click it and Unblock the Notifications