காதலிக்க மறுத்த மாணவி மீது ஆசிட் வீசிய வாலிபர்
மதுரை: காதலிக்க மறுத்த மாணவியை கத்தியால் குத்தியும், ஆசிட் வீசியும் கொலை செய்ய முயன்ற வாலிபரை போலீசார் தேடி வருகிறார்கள்.
மதுரை மாவட்டம், சமயநல்லூரைச் சேர்ந்த முத்தையா என்பவரின் மகள் பாண்டீஸ்வரி (15). இவர் அங்குள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். அதே பகுதியைச் சேர்ந்த வேல்முருகன் (19), பாண்டீஸ்வரியை ஒருதலையாக காதலித்து வந்துள்ளார்.
விவசாயக் கல்லூரியில் முதலாம் ஆண்டு படிக்கும் மாணவரான இவரின் காதலை பாண்டீஸ்வரி ஏற்கவில்லை.
இந் நிலையில் பாண்டீஸ்வரியின் வீட்டுக்கு வந்த வேல்முருகன் அவரை திருமணம் செய்து கொள்ள கோவிலுக்கு வருமாறு கட்டாயப்படுத்தியுள்ளார். ஆனால் இதற்கு பாண்டீஸ்வரி மறுத்துள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன் கத்தியால் பாண்டீஸ்வரியை குத்தினார். கத்திகுத்து காயத்துடன் அலறியபடி ரோட்டில் ஓடிய அந்தப் பெண்ணின் மீது ஆசிட் பாட்டிலை வீசினார் வேல்முருகன்.
இதில் பாண்டீஸ்வரி மீதும், இதைத் தடுக்க வந்த பாண்டீஸ்வரியின் தாத்தா அழகுமலை மீதும் ஆசிட் தெறித்தது. படுகாயமடைந்த இருவரும் உடல் வெந்த நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.
தப்பி ஓடிவிட்ட வேல்முருகனை போலீசார் தேடி வருகிறார்கள்.