தீட்சிதர்களுக்கு தமிழக அரசு கடும் எச்சரிக்கை
சென்னை: சிதம்பரம் நடராஜர் கோவிலில் தேவாரம், திருவாசகம் பாடுவோரைத் தடுக்க முயலும் தீட்சிதர்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடு்க்கப்படும் என தமிழக அரசு எச்சரித்துள்ளது.
இந்தக் கோவிலில் பரம்பரை பூசாரிகளான தீட்சிதர்கள் சமஸ்கிருதத்தி்ல் தான் மந்திரங்கள் ஓத வேண்டும் என்று கூறி வருகின்றனர். இதை பல்வேறு தமிழ் அமைப்புகளும் எதிர்த்து வந்தன.
இது தொடர்பான வழக்குகள், மோதல்கள் தொடர்ந்த கொண்டுள்ளன.
இந் நிலையில் தமிழில் தேவாரம், திருவாசகம் படிக்க அனுமதி அளித்தது தமிழக இந்து அறநிலையத்துறை. இதைத் தொடர்ந்து தேவாரம் படிக்கச் சென்றவர்களை தீட்சிதர்கள் தடுக்கவே அடிதடி ஏற்பட்டது.
தலையிட்ட போலீசாரையும் தீட்சிதர்கள் தாக்கவே அவர்களில் 12 பேர் கைது செய்யப்பட்டனர். அதே போல தேவாரம் படிக்கச் சென்ற ஓதுவார்களுக்கும் போலீசாருக்கும் இடையே மோதல் நடந்தது தொடர்பாக அவர்களில் சுமார் 34 பேரும் கைது செய்யப்பட்டனர்.
இந் நிலையில் இன்று தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தமிழில் மந்திரம் ஓதுபவர்களைத் தடுக்கும் தீட்சிதர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்துள்ளது.
அந்த அறிக்கையில்,
எந்தவித கட்டணமும் செலுத்தாமல் தேவாரத்தையும் திருவாசகத்தையும் சிதம்பரம் கோவிலில் படிக்கலாம். இது தொடர்பான அரசின் உத்தரவை தீட்சிதர்கள் மதித்து நடக்க வேண்டும்.
தமிழில் மந்திரம் ஓதுவோரை தடுக்கக் கூடாது. மீறினால் சட்டப்படி மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறப்பட்டுள்ளது.