கார் கடன்: மாருதி-ஸ்ரீராம் பைனான்ஸ் ரூ1000 கோடி திட்டம்
டெல்லி: புறநகர் மற்றும் கிராமப்புற வாடிக்கையாளர்களுக்கான சிறப்பு கார் கடன் திட்டத்தை வழங்குவதற்காக மாருதி சுசூகி நிறுவனமும், ஸ்ரீராம் சிட்டி யூனியன் நிறுவனமும் ஒப்பந்தம் செய்துகொண்டுள்ளன.
நாட்டின் மிகப் பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசிகியின் மாருதி 800, ஆம்னி, ஆல்ட்டோ போன்ற அடிப்படை மாடல்களுக்கு இந்த நிதிவசதி அளிக்கப்படுகிறது. இதற்கான ஒப்பந்தம் கடந்த 10ம் தேதி கையெழுத்தானது.
கடன் திட்டம் குறித்து மாருதி சுசூகி தலைமை பொது மேலாளர் (விற்பனை) ஆர்.எஸ்.கால்சி கூறுகையில்,
ஊரக மற்றும் புறநகர் கார் மார்க்கெட்டை வளைப்பதுதான் இந்த ஒப்பந்தத்தின் நோக்கமாகும். மக்கள் விரும்பும் மாடல்கள் எங்களிடம் உள்ளன. வாடிக்கையாளர் நாட்டின் எந்த மூலையில் இருந்தாலும் அவற்றை கொண்டு சேர்ப்பதற்கான திறமையான கட்டமைப்பு வசதியும் உள்ளது.
ஆனாலும் முக்கிய மெட்ரோ நகரங்கள் தவிர்த்த பிற பகுதிகளைச் சேர்ந்த வாடிக்கையாளர்களுக்கு கடன் வசதியை ஏற்படுத்துவதற்கு இன்னும் நிறைய செய்ய வேண்டியிருக்கிறது.
இப்போசு ஸ்ரீராம் நிதி நிறுவனத்துடன் தற்போது செய்துகொண்டுள்ள ஒப்பந்தத்தின்படி சிரமம் இல்லாத எளிய நடைமுறைகளின்கீழ் எங்கள் வாடிக்கையாளர்கள் விரைவில் கடன் பெறமுடியும் என்றார்.
ஸ்ரீராம் சிட்டி செயல் இயக்குனர் சுபஸ்ரீ ஸ்ரீராம் கூறுகையில்,
மாருதி சுசூகி நிறுவனத்துடன் கூட்டாகச் செயல்படுத்தப்போகும் இந்தத் திட்டத்தினால் இருதரப்பு வாடிக்கையாளர்களுக்கும் பலன் உண்டு. முதற்கட்டமாக இதற்காக ரூ.1,000 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு, கேரளம், கர்நாடகம் மற்றும் ஆந்திரப்பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இந்தக் கார் கடன் வசதித் திட்டம் அறிமுகப்படுத்தப்படும். படிப்படியாக நாட்டின் பிற பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
பெருநகரங்கள் தவிர இரண்டாம் தட்டு, மூன்றாம் தட்டு நகரங்களில் உள்ள வாடிக்கையாளர் சந்தையைக் குறிவைத்தே நாங்கள் இந்த கடன் திட்டத்தை செயல்படுத்துகிறோம்" என்றார்.











Click it and Unblock the Notifications