ரிலையன்ஸ் டேட்டா கார்டு விலை குறைப்பு
2008-09க்கான மத்திய அரசு பட்ஜெட்டில் வயர்லெஸ் டேட்டா கார்டுகள் மீதான கலால் வரி குறைக்கப்பட்டதால் ரிலையன்ஸ் நிறுவனமும் தங்கள் தயாரிப்புகளின் விலையைக் குறைத்துள்ளது. இதுவரை, ரிலையன்ஸ் பிசிஎம்சிஐஏ மற்றும் யூஎஸ்பி மோடம் டேட்டா கார்டுகள் தலா ரூ.2,990 மற்றும் ரூ.2,850க்கும் விற்கப்பட்டன. இனி, அவை தலா ரூ. 2,590 மற்றும் ரூ. 2,490க்கும் விற்கப்படும்.
ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் இதுவரை 1 கோடி டேட்டா கார்டுகளை விற்றுள்ளது.
இதுபற்றி ஆர்-காம் நிறுவனத்தின் பிரசிடெண்ட் (பர்சனல் பிசினஸ்) எஸ்.பி.ஷுக்லா கூறுகையில், "வாடிக்கையாளர்களுக்கு கட்டுப்படியாகும் செலவில் முதல் தரமான இன்டர்நெட் சேவையைப் பெற்றுத்தரும் நோக்கத்திலேயே செயல்படுகின்றோம்.
இந்த விலைகுறைப்பினால் ரிலையன்ஸ் நெட்கனெக்ட் இன்டர்நெட் சேவைகள் இன்னும் மலிவான விலையில் பெரும்பாலான மக்களைச் சென்றடையும். இதன்மூலம் வளர்ந்துவரும் இன்டர்நெட் துறையில் அதிக வாடிக்கையாளர்களைப் பெற்று இந்தத் துறையில் முன்னணி இடத்தைப் பெறுவோம்" என்றார்.
கம்ப்யூட்டர் மார்க்கெட்டில் லாப்-டாப் பயன்படுத்தும் வாடிக்கையாளர்களில் 30 சதவீதத்தினரிடமும், டெஸ்க்-டாப் பயன்படுத்துவோரில் 10 சதவீதத்தினரிடமும் தமது வயர்லெஸ் டேட்டா கார்டுகளை விற்றுவிட ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் நிறுவனம் இலக்கு வைத்துள்ளது.
இந்தியாவில் தற்போதைய நிலவரப்படி, 30 லட்சம் பேர் லாப்-டாப் கம்ப்யூட்டரை பயன்படுத்துகின்றனர். 2.5 கோடி டெஸ்க்-டாப் கம்ப்யூட்டர்கள் பயன்படுத்தப்படுகின்றன. இதில், கம்ப்யூட்டர் பயன்படுத்துவோரின் எண்ணிக்கை ஆண்டுதோறும் கணிசமாக உயர்ந்து வருகிறது. தோராயமாக, லாப்-டாப் பயன்பாடு ஆண்டுக்கு 80 சதவீதமும், டெஸ்க்-டாப் பயன்பாடு ஆண்டுக்கு 20 சதவீதமும் உயர்ந்து வருவதாகவும் புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.