முல்லைப் பெரியாறு: கேரளாவுக்கு 4 மாத கால கூடுதல் அவகாசம்
டெல்லி: முல்லைப் பெரியாறு அணை தொடர்பான வழக்கில் கூடுதல் ஆவணங்களைத் தாக்கல் செய்ய கேரள அரசுக்கு உச்சநீதிமன்றம் அவகாசம் அளித்துள்ளது. அதேசமயம் இதுதொடர்பாக சுப்ரமணியம் சுவாமி மற்றும் கேரள அமைப்பு தாக்கல் செய்த மனுக்களை அது தள்ளுபடி செய்து விட்டது.
முல்லைப் பெரியாறு அணையின் உயரத்தை அதிகரித்துக் கொள்ள தமிழக அரசுக்கு அனுமதி அளித்து கடந்த 2006ம் ஆண்டு உச்சநீதிமன்றம் தீர்பபளித்தது. ஆனால் அதை முடக்கும் வகையில் கேரள அரசு அவசரச் சட்டத்தைப் பிறப்பித்தது.
இதை எதிர்த்து தமிழக அரசின் சார்பில் உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று நீதிபதிகள் அரிஜித் பசாயத், டி.கே.ஜெயின், தாக்கூர் அடங்கிய பெஞ்ச் முன்பு விசாரணைக்கு வந்தது.
அப்போது கேரள அரசின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் பட்வாரியா, கூடுதல் ஆவணங்கள் தாக்கல் செய்ய கூடுதல் அவகாசம் தேவை என்று கோரிக்கை விடுத்தார்.
இதை ஏற்ற உச்சநீதிமன்றம், ஜூலை 3வது வாரத்திற்கு வழக்கை ஒத்தி வைத்து அன்றைக்குள் கூடுதல் ஆவணங்களை தாக்கல் செய்யுமாறு உத்தரவிட்டது.
சு.சுவாமி மனு தள்ளுபடி:
இந்த நிலையில் கேரளாவைச் சேர்ந்த ஜனசக்தி என்ற அமைப்பு புதிய அணை கட்ட அனுமதி தர வேண்டும் என்று கோரியும், ஜனதாக் கட்சித் தலைவர் சுப்ரமணியம் சுவாமி, உச்சநீதிமன்றத் தீர்ப்பை கேரள அரசு அமல்படுத்த வேண்டும் என்று உத்தரவிடக் கோரியும் தாக்கல் செய்த மனுக்களை நீதிபதிகள் தள்ளுபடி செய்து விட்டனர்.