மருத்துவனையில் ரவுடி வெட்டிக் கொலை
களக்காடு: களக்காட்டில் பணம் கேட்டு மிரட்டி இருவரை கத்தியால் குத்திய ரவுடி அரசு மருத்துவமனையில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார்.
களக்காடு கோட்டை தெருவை சேர்ந்தவர் சுப்பையா மகன் முருகன். நெல் அறுவடை இயந்திர புரோக்கர். இவர் நேற்று பிற்பகலில் களக்காடு பழைய பஸ் நிலையம் காஜராஜர் சிலை அருகே தனது நண்பர்கள் கீழதுவரைக்குளத்தை சேர்ந்த ராஜா, செல்லத்துரை ஆகியோருடன் பேசிக் கொண்டிருந்தார்.
அப்போது அங்கு வந்த திரட்டூரை சேர்ந்த நாராயணன் மகன் உப்பு என்ற தங்கராஜ், முருகனிடம் குடிப்பதற்கு பணம் கேட்டு மிரட்டினார். ஆனால் அவர் கொடுக்க மறுத்தார். இதில் இருவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் ஆத்திரமடைந்த தங்கராஜ், ராஜா, செல்லத்துரை ஆகிய இருவரையும் கத்தியால் குத்திவிட்டு ஓடிவிட்டார்.
இதனால் அதிர்ச்சியடைந்த முருகன் படுகாயமடைந்த இருவரையும் களக்காடு அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தார். அங்கு டாக்டர்கள் இல்லாததால் அவர்களை பாளை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார். இந்நிலையில் தப்பியோடிய தங்கராஜ் களக்காடு அரசு மருத்துமனையில் சிகிச்சை பெற வந்தார்.
அப்போது அங்கிருந்த முருகன் எனது நண்பர்களை குத்தி விட்டு இங்கு எதற்காக வந்தாய் என்று கூறி தங்கராஜை அரிவாளால் தலை மற்றும் உடலின் பல பாகங்களில் சரமாரியாக வெட்டினார்.
ரத்தம் சொட்ட சொட்ட அவர் மருத்துவமனைக்குள் ஓடினார். பின்னர் சுருண்டு விழுந்து உயிரிழந்தார்.
தகவல் அறிந்ததும நாங்குநேரி டிஎஸ்பி சண்முகநாதன், இன்ஸ்பெக்டர் நேதாஜி மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரனை நடத்தினர். களக்காடு அரசு மருத்துவமனைக்குள்ளே நடந்த இந்த கொலை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
கொலை செய்யப்பட்ட தங்கராஜ் பிரபல ரவுடியாவார். இவர் மீது களக்காடு போலீஸ் நிலையத்தில் இரு கொலை முயற்சிகள் உள்பட பல்வேறு வழக்குகள் உள்ளன. இவர் 3 முறை குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications