விமான நிலைய பெயர் காங்.-தெலுங்கு தேசம் மோதல்
ஹைதராபாத்: தராபாத்தில் புதிதாக அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட புதிய விமான நிலையத்திற்கு ராஜீவ் காந்தி பெயர் சூட்டப்பட்டிருப்பதற்கு தெலுங்கு தேசம் கண்டனம் தெரிவித்துள்ளது.
ஹைதராபாத் அருகே ஷாம்சாபாத்தில் பிரமாண்டமான விமான நிலையம் உருவாக்கப்பட்டுள்ளது. ஜிஎம்ஆர். நிறுவனம் இந்த விமான நிலையத்தை, இந்திய விமான நிலைய ஆணையகத்துடன் இணைந்து உருவாக்கியுள்ளது.
இந்த விமான நிலையத்தை இன்று காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி இன்று திறந்து வைத்தார்.
இந்த விமான நிலையத்திற்கு மறைந்த ராஜீவ் காந்தியின் பெயர் சூட்டப்பட்டுள்ளது. ஆனால் இதற்கு தெலுங்கு தேசம் கடுமையாக ஆட்சேபித்துள்ளது.
மறைந்த எம்.டி.ராமாராவின் பெயரை விமான நிலையத்தின் உள்நாட்டு முனையத்திற்குச் சூட்ட வேண்டும் என்று தெலுங்கு தேசம் கோரியுள்ளது.
இதுகுறித்து தெலுங்கு தேசம் கட்சியின் எம்.எல்.ஏக்கள் தேவேந்தர் கெளட், ஹரீஷ்வர் ரெட்டி, தயாகர் ராவ், கேசவ் ஆகியோர் கூறுகையில், தெலுங்கு திரையுலகின் சூப்பர் ஸ்டாராக, தெலுங்கு மக்களின் பெருமையாக, பழம்பெரும் அரசியல் தலைவராக, முதல்வராக விளங்கி மறைந்த ஒரு மாபெரும் தலைவரை காங்கிரஸ் கட்சி அவமானப்படுத்தினால் அதை நாங்கள் பொறுத்துக் கொள்ள மாட்டோம்.
உடனடியாக என்.டி.ஆர். பெயரை வைக்க வேண்டும். இல்லாவிட்டால் பொங்கி எழுவோம் என்று அவர்கள் எச்சரித்தனர்.
ஆனால் மாநில அரசின் முடிவை அம்மாநில சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் முகம்மது அலி ஷபீர் நியாயப்படுத்தியுள்ளார். அவர் கூறுகையில், இந்தியாவின் பிரதமராக இருந்தவர் ராஜீவ் காந்தி. நவீன தொழில்நுட்பத்தை இந்தியாவுக்குக் கொண்டு வந்த சிற்பி. அவரது பெயரை வைப்பதில் என்ன தவறு இருக்கிறது.
ஒரே விமான நிலையத்திற்கு இரு பெயர்களை சூட்ட முடிவு செய்தது முந்தைய அரசின் தவறு. அதற்கு காங்கிரஸ் பொறுப்பேற்க முடியாது என்றார் அவர்.
பிற பெருநகரங்களில் உள்ள விமான நிலையங்களில் இதுபோல இரு பெயர்கள் இருப்பதாக செய்தியாளர்கள் கேட்டபோது அதற்குப் பதிலளிக்க மறுத்து விட்டார் ஷபீர்.
ஆனால் தெலுங்கு தேசம் எம்.பி. தேவேந்தர் கெளட் கூறுகையில், பேகம்பேட்டில் தற்போது உள்ள சர்வதேச விமான நிலையத்தின் பன்னாட்டு முனையத்திற்கு ராஜீவ் காந்தி பெயரும், உள்நாட்டு முனையத்திற்கு என்.டி.ஆர். பெயரும் சூட்டப்பட்டதை மத்திய அரசுதான் அனுமதித்தது.
புதிய விமான நிலையத்திலும் இதேபோல பெயரிடப்படும் என நினைத்துதான் நாங்கள் அமைதியாக இருந்தோம். ஆனால் இப்போது உள்நாட்டு முனையத்திற்கு என்.டி.ஆர். பெயரை சூட்டவில்லை. மொத்த விமான நிலையத்திற்கும் ராஜீவ் காந்தி பெயரை சூட்டி விட்டனர். இதை ஏற்றுக் கொள்ள முடியாது.
ஏற்கனவே ஆந்திராவில் அமல்படுத்தப்பட்டுள்ள பல்வேறு திட்டங்களுக்கு இந்திராவின் பெயரையும், ராஜீவின் பெயரையும் வைத்துள்ளனர். ஆனால் மண்ணின் மைந்தரான என்.டி.ஆரை இழிவுபடுத்துகின்றனர்.
தெலுங்கு தேசம் மீண்டும் ஆட்சிப் பொறுப்புக்கு வந்தால் ராஜீவ் காந்தியின் பெயரை நீக்குவோம் என்றார் கெளட்.