தேவர் சிலை சேதம்: இருவர் கைது
விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சங்கரலிங்கபுரத்தில் உள்ள தேவர் சிலையை சேதப்படுத்தியதாக இரண்டு பேரை போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
ராஜபாளையம் அருகே சங்கரலிங்கபுரத்தில் உள்ள முத்துராமலிங்க தேவர் சிலை கடந்த சில தினங்களுக்கு முன்பு சமூக விரோதிகள் சிலரால் சேதப்படுத்தப்பட்டது. இதனால் அங்கு கலவரம் ஏற்பட்டது. பஸ் கண்ணாடிகள் உடைக்கப்பட்டன.
தென் மாவட்டங்களில் கலவரச் சூழல் ஏற்பட்டதால்,
தேவர் சிலை உடைப்புக்கு காரணமானவர்களை உடனே கைது செய்வேண்டும் என்று அரசியல் கட்சிகள் தமிழக அரசுக்கு கோரிக்கை விடுத்தன.
இந்த நிலையில் துரிதமாக செயல்பட்ட போலீசார், சங்கரலிங்கபுரத்தை சேர்ந்த மணிமுத்து, முக்தாநதியை சேர்ந்த வேல்ராஜ் ஆகியோரை கைது செய்தனர்.
வேல்ராஜ் தனது டிராக்டர் மூலம் சங்கரலிங்கபுரம் வழியாக திருட்டுத்தனமாக மணல் ஏற்றிச் சென்றுள்ளார். இதைக் கண்டுகொண்ட மணிமுத்து வேல்ராஜை மிரட்டி பணம் கேட்டாராம்.
இருவருக்கும் இடையே தகராறு கைகலப்பில் முடிந்து பின்னர் தேவர் சிலை உடைக்கப்பட்டுள்ளது.
விசாரணையில் ஒப்புக்கொண்ட இருவரையும் போலீசார் ராஜபாளையம் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து சிறையில் அடைத்தனர்.