ராணுவ தாக்குதலை நிறுத்தினால் பேச்சுக்கு தயார்-புலிகள்
விடுதலைப் புலிகளுக்கு ஆதரவான தமிழ் தேசிய கூட்டமைப்பைச் சேர்ந்த எம்.பிக்கள் குழு சமீபத்தில் வன்னிக்குச் சென்று நடேசனை சந்தித்தது. அப்போது அவர்களிடம் நடேசன் பேசுகையில், விடுதலைப் புலிகள் இயக்கம், அரசுடன் பேச்சு நடத்தத் தயார். ஆனால் முதலில் ராணுவத் தாக்குதலை இலங்கை அரசு நிறுத்த வேண்டும். தமிழர்கள் மீதான வெறித் தாக்குதல் நிறுத்தப்பட வேண்டும்.
தாக்குதலை நிறுத்துவதாக இருந்தால் அதில் இலங்கை அரசு தீவிரமாக இருக்க வேண்டும். தாக்குதலை நிறுத்துவது போல நிறுத்தி விட்டு புலிகள் மீதோ அல்லது தமிழ் மக்கள் மீதோ தாக்குதல் நடத்த முயற்சிக்கக் கூடாது.
இலங்கை அரசு தாக்குதலை நிறுத்தினால் பேச்சுவார்த்தையில் கலந்து கொள்ள புலிகள் உடனடியாக முன்வருவார்கள்.
அரசுதான் போர் நிறுத்த ஒப்பந்தத்தை மீறி மீண்டும் தாக்குதலை முதலில் தொடங்கியது. எனவே அதுதான் முதலில் தாக்குதலை நிறுத்த வேண்டும்.
பேச்சுவார்த்தைக்கு புலிகள் முன்வருவதன் மூலம், நாங்கள் தாழ்ந்து விட்டோம், இறங்கி வருகிறோம் என்று பொருள் அல்ல. முடிவெடுக்க வேண்டியது இப்போது இலங்கை அரசுதான் என்றார் நடேசன்.
இத்தகவலை யாழ்ப்பாணம் மாவட்ட தமிழ் எம்.பி. சுரேஷ் பிரேமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
நடேசனை 13 தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் சந்தித்துப் பேசினர். வன்னியில் நடந்த கண்ணிவெடித் தாக்குதலில் பலியான எம்.பி. சிவநேசனின் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ள வந்தபோது இந்த சந்திப்பு நடந்துள்ளது.