நகை கண்காட்சியில் ரூ.12 லட்சம் கொள்ளை-வாலிபர் கைது
சென்னை: சென்னையில் நடந்த நகை கண்காட்சியில் ரூ.12 லட்சம் கொள்ளையடித்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த நகை வியாபாரிகள், சென்னை எழும்பூர் எத்திராஜ் சாலையில் உள்ள நட்சத்திர ஓட்டலில் கடந்த 3 நாட்கள் நகை கண்காட்சி மற்றும் விற்பனை நடத்தினர்.
கண்காட்சியில் நகைகளை விற்பனை செய்வதற்காக ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த 20 இளைஞர்கள் வந்திருந்தனர். ஏராளமானோர் கண்காட்சியைப் பார்வையிட்டு நகைகளையும் வாங்கிச் சென்றனர்.
விற்பனையில் கிடைத்த ரூ.12 லட்சம் பணத்தை பெட்டியில் வைத்து பூட்டி, அதை ஹோட்டலில் அறை ஒன்றில் வைத்திருந்தனர்.
இதில் நகைகளை விற்பதற்காக வந்த வாலிபர்களில் யூசுப்கான் என்பவர் ரூ.12 லட்சம் பணத்தை எடுத்துக்கொண்டு நேற்று அதிகாலை தப்பினார்.
இதுபற்றி எழும்பூர் போலீசில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. தப்பி ஓடிய யூசுப்கானை பிடிக்க தனி போலீஸ் படை அமைக்கப்பட்டது. தனிப்படை போலீசார் யூசுப்கானை கும்பகோணத்தில் கைது செய்தனர்.