தமிழகம் வழியாக இந்தியாவுக்குள் ஊடுறுவும் பாக். கள்ள நோட்டு

Subscribe to Oneindia Tamil

டெல்லி: தமிழகத்தின் வழியாக பெருமளவில் கள்ள நோட்டுக்களை பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ இந்தியாவுக்குள் வெள்ளமென குவித்து வருவதாக புலனாய்வு விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இந்தியாவில் நிலவும் மத நல்லிணக்கம், அமைதி, ஒற்றுமையை சீர்குலைக்க இதுநாள் வரை தீவிரவாதத்தை மட்டுமே அஸ்திரமாக பயன்படுத்தி வந்த பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு இப்போது கள்ள நோட்டு என்கிற புதிய அஸ்திரத்தையும் கையில் எடுத்துள்ளது.

முன்பு எப்போதையும் விட சமீப காலமாக நாடு முழுவதும் கள்ள நோட்டுக்களின் பெருக்கம் அதிகரித்து விட்டது. வங்கி ஏடிஎம் மையங்களிலும் கள்ள நோட்டுக்கள் சரமாரியாக வருவதால், மக்கள் பெரும் அதிர்ச்சியும், குழப்பமும் அடைந்துள்ளனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் வழியாகத்தான் பாகிஸ்தான் கள்ள நோட்டுக்கள் பெருமளவில் இந்தியாவுக்குள் ஊடுறுவுவதாக புலனாய்வு துறை விசாரணையில் தெரிய வந்துள்ளது.

சமீபத்தில் தென்னிந்தியாவில் ரூ. 8 கோடி மதிப்புள்ள கள்ள நோட்டுக்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. சிபிஐ வேட்டையில் இவை சிக்கின.

இதுகுறித்து சிபிஐ சிறப்பு இயக்குநர் எம்.எல். சர்மா கூறுகையில், ரூ. 8 கோடி மதிப்பிலான கள்ள நோட்டு என்பது ஒரு சிறு துரும்புதான். இதை விட பல மடங்கு அதிகமான மதிப்புடைய கள்ள நோட்டுக்கள் இங்கு புழக்கத்தில் இருப்பதாக அறிகிறோம்.

இந்த கள்ள நோட்டுக்களுக்கும், நிஜமான ரூபாய் நோட்டுகளுக்கும் எந்தவித வித்தியாசமும் இல்லை. அச்சு அசல் அப்படியே நிஜமான நோட்டுக்கள் போலவே இவை இருக்கின்றன. கள்ள நோட்டுக்களைக் கண்டுபிடிக்கும் நிபுணர்களால் கூட சில நோட்டுக்களை கண்டுபிடிக்க முடியவில்லை. எளிதில் வித்தியாசம் காண முடியாத அளவுக்கு தத்ரூபமாக கள்ள நோட்டுக்களைத் தயாரித்துள்ளனர்.

முன்பு வட இந்தியாவில்தான் பெருமளவில் கள்ள நோட்டுக்களை பாகிஸ்தான் புழக்கத்தில் விட்டு வந்தது. இப்போது தங்களது இலக்கை தென் இந்தியாவின் பக்கம் திருப்பியுள்ளது கவலை தருகிறது.

சமீபத்தில் கே.எம்.அப்துல்லா என்பவர் ரூ. 2.6 கோடி கள்ள நோட்டுடன் பிடிபட்டார். இவர் புழக்கத்தில் விட்ட ரூ. 50 ஆயிரம் மதிப்புள்ள கள்ள நோட்டுக்கள் மைசூர், பெங்களூர், ஹைதராபாத் நகரங்களில் பிடிபட்டன.

மேலும், தமிழகம் மற்றும் ஆந்திராவைச் சேர்ந்த நன்கு படித்த இளைஞர்களையும் தங்களது மோசடி செயலுக்கு இவர்கள் பயன்படுத்தி வருவதும் ஐபி விசாரணையில் தெரிய வந்துள்ளது.

500 ரூபாய் கள்ள நோட்டுக்களைத்தான் பெருமளவில் கள்ள நோட்டுக் கும்பல் புழக்கத்தில் விட்டு வருகிறது.

பாகிஸ்தானின் சகலா என்ற இடத்தில்தான் இந்த கள்ள நோட்டுக்கள் அச்சிடப்படுகின்றன. ஐஎஸ்ஐ முழு ஆதரவுடன் இந்த வேலை நடைபெறுகிறது.

இங்கு அச்சிடப்படும் கள்ள நோட்டுக்கள் முதலில் துபாய்க்கு அனுப்பப்படுகிறது. பின்னர் இலங்கைக்கு செல்கிறது. அதன் பின்னர் தமிழகத்திற்கு வந்து சேருகிறது. இங்கிருந்து நாட்டின் பல்வேறு பகுதிகளுக்கும் புழக்கத்தில் விடப்படுகிறது.

இதேபோல வங்கதேசம், நேபாளம் வழியாகவும் இவர்கள் நாட்டுக்குள் கள்ள நோட்டுக்களை கொண்டு வருகின்றனர். மலேசியா வழியாகவும் சில நேரங்களில் இந்தியாவுக்குள் இந்த கள்ள நோட்டுக்கள் கொண்டு வரப்படுகின்றன.

சாலை மார்க்கமாகவும், கடல் மார்க்கமாகவும், வான் ரீதியாகவும் கள்ள நோட்டுக்களை இந்தியாவுக்குள் கொண்டு வந்து குவிக்கிறது பாகிஸ்தான் கும்பல். இது மிகப் பெரும் பிரச்சினையாக மாறி வருகிறது. நாட்டின் ஒட்டுமொத்த பொருளாதாரத்தையும் சீர்குலைக்கும் நோக்கில் பாகிஸ்தான் இந்த வேலையில் ஈடுபட்டு வருகிறது.

இப்படி வரும் கள்ள நோட்டுக்களை தீவிரவாத செயல்களுக்குத் தேவையான செலவுகளுக்கும் இக்கும்பல் பயன்படுத்திக் கொள்கிறது என்றும் தெரிய வந்துள்ளது என்றார் சர்மா.

இந்தியாவில் புழக்கத்தில் விடப்பட்டுள்ள பாகிஸ்தான் கள்ள நோட்டுக்களின் எண்ணிக்கை நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் மதிப்பில் இருக்கும் எனவும் சிபிஐ கூறுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+