காங்-முலாயம் கூட்டணிக்கு லாலு முயற்சி
டெல்லி: நீண்ட காலமாக பரம வைரிகளாகத் திழந்த ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவர் லாலு பிரசாத் யாதவ், சமாஜ்வாடி கட்சித் தலைவர் முலாயம் சிங் யாதவ் இடையே மீண்டும் நட்புறவு மலர்ந்துள்ளது.
இதையடுத்து முலாயம்-காங்கிரஸ் இடையிலான பகையைப் போக்கும் வேலையில் லாலு ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.
சோசலிஸ்ட்டுகளான லாலு, முலாயம் ஆகியோர் வி.பி.சிங்கின் ஜனதா தளத்தில் இருந்தவர்கள் தான். அவர் பிரதமராகவும் முக்கிய பங்கு வகித்தனர்.
ராம ஜென்ம பூமி விவகாரத்தில் வி.பி.சிங்கின் ஆட்சியை பாஜக கவிழ்த்தையடுத்து ஜனதா பரிவாரமும் உடைந்து சிதறியது. இதையடுத்து லாலுவும் முலாயமும் தனித்தனி கட்சிகளை உருவாக்கினர்.
இருவரும் எதிரெதிர் முகாமில் நின்றனர். உத்தரப் பிரதேசத்திலும் பிகாரிலும் ஒருவரை ஒருவர் எதிர்த்து வேட்பாளர்களை களமிறக்கினர்.
இந் நிலையில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் லாலுவும் முலாயமும் ஆட்சியை இழந்தனர்.
உத்தரப் பிரதேசத்தில் பகுஜன் சமாஜ் கட்சியின் மாபெரும் வளர்ச்சியால் அதிர்ந்து போய் நிற்கின்றனர் முலாயம், பாஜக, காங்கிரஸ் ஆகியவை.
முதல்வர் மாயாவதியை எதிர்கொள்ள கூட்டணி அமைத்தாக வேண்டிய கட்டாயத்தில் காங்கிரசும் முலாயம் சி்ங் யாதவும் உள்ளனர். ஆனால், அமர்சிங் மூலமாக அமிதாப்பச்சனுக்கு முலாயம் நெருக்கமானதால் அவரை காங்கிரஸ் ஒதுக்க ஆரம்பித்தது.
கடந்த மக்களவைத் தேர்தலில் உத்தரப் பிரதேசத்தில் பாஜகவின் மாபெரும் தோல்விக்குக் காரணமாக அமைந்த முலாயம் சிங் யாதவை கூட்டணியில் சேர்க்க காங்கிரஸ் மறுத்துவிட்டது.
தொடர்ந்து இரு கட்சிகளுக்கும் இடையிலான தூரம் அதிகரித்துக் கொண்டே வந்தது.
முலாயமுக்கு இடதுசாரிகளின் ஆதரவு மட்டும் இல்லாவிட்டால் உத்தரப் பிரதேசத்தில் அவரது ஆட்சியையையே காங்கிரஸ் கலைத்திருக்கும் என்ற சூழல் நிலவியது.
இந் நிலையில் திடீரென முலாயமும் லாலும் கைகோர்த்துள்ளனர்.
இதைத் தொடர்ந்து காங்கிரஸ்-முலாயம் இடையிலும் கூட்டணியை உருவாக்கும் முயற்சிகளில் லாலு ஈடுபட்டுள்ளார்.
மாயாவதியை சமாளிக்க முடியாமல் திணறும் முலாயம், சோனியா இருவருமே கூட்டணி அமைக்க ஆர்வம் காட்டி வருவதாக தெரிகிறது.
இதன்மூலம் முலாயம்-சந்திரபாபு நாயுடு-இடதுசாரிகள் கூட்டணியில் மூன்றாவது அணி பலம் பெறுவதை தடுக்க சோனியா திட்டமிடுவதாகத் தெரிகிறது.
இப்படி ஒரு அணி அமைந்தால் அது மதசார்பற்ற வாக்குகளைப் பிரித்து காங்கிரசுக்கே வேட்டு வைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே ஜெயலலிதா வெளியேறி பாஜகவுடன் கூட்டு சேர்ந்ததால் மூன்றாவது அணி ஆரம்பத்திலேயே கலகலத்துப் போயுள்ளது. இந் நிலையில் முலாயமும் வெளியேறிவிட்டால் நாயுடு, சவுதாலா என சிலர் மட்டுமே அதில் எஞ்சியிருப்பர்.












Click it and Unblock the Notifications