சரப்ஜித் சிங் தூக்கு ஒத்திவைப்பு
இஸ்லாமாபாத்: சரப்ஜித் சிங்கைத் தூக்கிலிடுவதை ஏப்ரல் 30ம் தேதி வரை பாகிஸ்தான் அரசு ஒத்திவைத்திருப்பதாக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்தார்.
1990ம் ஆண்டு லாகூர் மற்றும் முல்தான் நகரங்களில் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக சரப்ஜித் சிங்கை பாகிஸ்தான் கைது செய்தது. அவர் லாகூர் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
அவருக்குத் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. அவர் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட கருணை மனுவை அதிபர் பர்வேஸ் முஷாரப் நிராகரித்து விட்டார்.
இதையடுத்து ஏப்ரல் 1ம் தேதி சரப்ஜித் சிங் தூக்கிலிடப்படுவார் என அறிவிக்கப்பட்டது.இது சரப்ஜித் சிங்கின் குடும்பத்தினரை பெரும் துயரத்தில் ஆழ்த்தியுள்ளது.
சரப்ஜித்தை காப்பாற்ற வேண்டும் என்று இந்திய அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இதுதொடர்பாக டெல்லிக்கு வந்துள்ள சரப்ஜித்தின் சகோதரி உள்ளிட்ட குடும்பத்தினர் ராகுல் காந்தி, சோனியா காந்தி ஆகியோரை சந்தித்து முறையிட்டனர்.
மத்திய அரசும், சரப்ஜித் சிங்கை தூக்கிலிடுவதை தவிர்க்க வேண்டும் என பாகிஸ்தானுக்கு கோரிக்கை விடுத்திருந்தது. இதுதொடர்பாக பாகிஸ்தானில் உள்ள இந்தியத் தூதரகம் மூலமாக மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வந்தது.
இந்த நிலையில் சரப்ஜித் சிங்குக்கு பொது மன்னிப்பு அளிக்க வேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை பாகிஸ்தான் நிராகரித்து விட்டது. ஏப்ரல் 1ம் தேதி சரப்ஜித் சிங் திட்டமிட்டபடி தூக்கில் போடப்படுவார் என பாகிஸ்தான் அறிவித்தது.
இதுகுறித்து பாகிஸ்தான் உள்துறைச் செய்தித் தொடர்பாளர் ஜாவேத் இக்பால் கூறுகையில், திட்டமிட்டபடி ஏப்ரல் 1ம் தேதி தூக்குத் தண்டனை நிறைவேற்றப்படும். தூக்குத் தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என எங்களுக்கு எந்த உத்தரவும் வரவில்லை என்றார்.
திடீர் ஒத்திவைப்பு:
இந் நிலையில், சரப்ஜித் சிங்கை தூக்கிலிடுவதை ஏப்ரல் 30ம் தேதி வரைக்கும் பாகிஸ்தான் அரசு ஒத்திவைத்துள்ளது. இது தொடர்பாக பாகிஸ்தான் அதிபர் பர்வேஸ் முஷாரப் உத்தரவு பிறப்பித்துள்ளதாக, இஸ்லாமாபாத்தில் உள்ள இந்திய தூதரகத்திடம் இருந்து தகவல் வந்துள்ளதாக வெளியுறவு அமைச்சர் பிரணாப் முகர்ஜி இன்று நாடாளுமன்றத்தி்ல் தெரிவித்தார்.
சரப்ஜித் சிங்கை மன்னித்து விடுமாறு கோரி இந்திய அரசிடமிருந்து கடைசி முயற்சியாக அதிபர் பர்வேஸ் முஷாரப்புக்குக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இதை முஷாரப் பரிசீலித்து வருவதாகவும், அனேகமாக மனிதாபிமான அடிப்படையில் முஷாரப், சரப்ஜித் சிங்குக்கு மன்னிப்பு வழங்கலாம் எனவும் கூறப்படுகிறது.
ஆயுள் தண்டனையாக மாறுமா?:
அதேசமயம், பாகிஸ்தான் அரசின் மனித உரிமை விவகாரத் துறை அமைச்சகமும், சரப்ஜித் சிங்கைத் தூக்கிலிடுவதற்குப் பதிலாக அவருக்கு ஆயுள் தண்டனை வழங்கலாம் என பரிந்துரைத்துள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
இந்தப் புதிய முன்னேற்றத்தின் விளைவாக, சரப்ஜித் சிங் உயிர் காப்பாற்றப்படக் கூடும் என்ற நம்பிக்கை பிறந்துள்ளது.












Click it and Unblock the Notifications