மாணவியிடம் ஆசிரியர் விஷமம் - பள்ளியை சூறையாடிய பெற்றோர்கள்
சென்னை: சென்னை ஆதம்பாக்கத்தில் 8வது வகுப்பு மாணவிக்கு 3 மாதங்களாக பாலியல் தொல்லை கொடுத்து வந்த ஆசிரியரின் செயலால் கொதிப்படைந்த பெற்றோர்கள் மற்றும் பொதுமக்கள் நூற்றுக்கணக்கில் திரண்டு வந்து பள்ளியை அடித்து நொறுக்கி சூறையாடினர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
ஆதம்பாக்கத்தில் மான்போர்ட் மெட்ரிகுலேஷன் பள்ளி உள்ளது. இங்கு ஆங்கிலம் மற்றும் யோகா ஆசிரியராக மரிய ஜோசப் மைக்கேல் என்பவர் பணியாற்றுகிறார். இவர் 8வது வகுப்பு படிக்கும் 13 வயது மாணவியிடம் கடந்த 3 மாதங்களாக பாலியல் தொந்தரவு செய்து வந்துள்ளார். அவரிடம் சிக்கி அந்த பெரும் அவதிப்பட்டு வந்தார். இதை வெளியே சொல்லக் கூடாது, வெளியே சொன்னால் இறுதித் தேர்வில் பெயில் ஆக்கி விடுவேன் என்றும் மிரட்டியுள்ளார் மைக்கேல்.
இந்த நிலையில் இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்ற முடிவுக்கு வந்த மாணவி தனது தாயார் மும்தாஜிடம் ஆசிரியரின் செயலைக் கூறவே அவர் அதிர்ச்சி அடைந்து பள்ளித் தலைமை ஆசிரியர் ஆரோக்கியராஜிடம் புகார் கூறினார். ஆனால் தலைமை ஆசிரியர் சரிவர நடவடிக்கை எடுக்கவில்லை என்று தெரிகிறது.
இதையடுத்து கொதிப்படைந்த மும்தாஜ், தவ்ஹீத் ஜமாத் அமைப்பிடம் கூறவே அந்த அமைப்பினரும், பொதுமக்களும், பிற பெற்றோர்களும் பள்ளிக்கு நேற்று மாலை திரண்டு வந்தனர்.
பள்ளிக்குள் நுழைந்த அவர்கள் கண்ணில் பட்டதை எல்லாம் அடித்து நொறுக்கினர். கண்ணாடி ஜன்னல்களை அடித்து நொறுக்கினர். பள்ளியின் ஆய்வகம் சேதமடைந்தது. சில கார்களும், இரு சக்கர வாகனங்களும் அடித்து நொறுக்கப்பட்டன.
தகவல் அறிந்து போலீஸார் விரைந்து வந்து அனைவரையும் சமாதானப்படுத்த முயன்றனர். ஆனால் அதற்குள் பள்ளிக்கு பெரும் சேதம் ஏற்பட்டிருந்தது.
இந்த பரபரப்பு சம்பவத்தைத் தொடர்ந்து பிரச்சினைக்குக் காரணமான ஆசிரியர் மைக்கேலை போலீஸார் கைது செய்தனர். உடனடியாக அவரை நீதிமன்றத்திற்குக் கொண்டு சென்று ஆஜர்படுத்தி, புழல் சிறையில் அடைத்தனர்.
ஆசிரியர் மைக்கேலின் செயல் குறித்து அந்த மாணவி கூறுகையில், தினசரி காலையில் வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு கால் மணி நேரம் அனைத்து மாணவ, மாணவியரும் தியானம் செய்வோம். அந்தசமயத்தில், என்னை ஆசிரியர் மைக்கேல் வகுப்பறைக்குப் பின்னால் உள்ள அறைக்கு அழைத்துச் சென்று தவறாக நடப்பார். மேலும், ஆசிரியர்கள் ஓய்வறையிலும் என்னிடம் தவறாக நடப்பார்.
இதுபோல செய்யாதீர்கள், என்னை விட்டு விடுங்கள் என்று நான் பலமுறை கெஞ்சியும் அவர் விட மாட்டார்.
செவ்வாய்க்கிழமை வகுப்பை விட்டு விட்டு தன்னுடன் வெளியே வருமாறு அவர் அழைத்தார். ஆனால் நான் வர மறுத்தேன். வராவிட்டால் இறுதித் தேர்வில் பெயில் ஆக்கி விடுவேன் என்று மிரட்டினார்.
இதற்கு மேலும் பொறுக்க முடியாது என்பதால்தான் எனது தாயாரிடம் நடந்ததைக் கூறினேன் என்றார் மாணவி.
இந்த விவகாரம் ஆதம்பாக்கத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கைது செய்யப்பட்ட ஆசிரியர் மைக்கேல் ஏற்கனவே சில முறை இதுபோல விஷமம் செய்து பிடிபட்டுள்ளதாகவும் பெற்றோர்கள் கூறுகின்றனர்.
13 வயது சிறுமியிடம் செக்ஸ் விஷமம் செய்த ஆசிரியர் மைக்கேலுக்கு வயது 50 என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications