வழக்கறிஞர் ஜோதி திடீரென திமுகவில் இணைந்தார்

கடந்த 12 ஆண்டுகளுக்கும் மேலாக அதிமுகவில் வழக்கறிஞராகப் பணியாற்றி வந்தவர் ஜோதி. ஜெயலலிதா மற்றும் சசிகலா உள்ளிட்டோரின் வழக்குகளை இவர்தான் பார்த்துக் கொண்டிருந்தார்.
இவருடைய திறமையை மதித்து, ஜெயலலிதா ராஜ்யசபா எம்.பியாகவும் ஜோதியை ஆக்கினார். ஆனால் நடந்து முடிந்த ராஜ்யசபா தேர்தலில் ஜோதிக்கு சீட் தரவில்லை. இதனால் கோபமடைந்த ஜோதி, திடீரென அதிமுகவிலிருந்து விலகினார். அதிமுக தொடர்பான வழக்குகளை இனிமேல் பார்க்கவும் மாட்டேன் என்றும் அறிவித்தார்.
இதனால் அதிர்ச்சி அடைந்த ஜெயலலிதா, நம்பிக்கைத் துரோகி என்று வர்ணித்து ஜோதியை கடுமையாக சாடி அறிக்கை விட்டார். அவரை கட்சியை விட்டும் நீக்கினார்.
இதையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த ஜோதி, ஜெயலலிதா, சசிகலாவின் பிடியில் இருப்பதாக பேட்டி அளித்தார். மேலும், ஜெயலலிதா மீதான வழக்குகள் திமுக அரசின் பழிவாங்கும் நடவடிக்கை, அனைத்தும் பொய் வழக்குகள் என்ற எனது கருத்தில் நான் இன்னும் உறுதியாக இருக்கிறேன் என்றும் கூறியிருந்தார்.
இந்த நிலையில் நேற்று தடாலடியாக முதல்வர் கருணாநிதியை சந்தித்து திமுகவில் தன்னை இணைத்துக் கொண்டார். இந்த நிகழ்வின்போது, அமைச்சர்கள் மு.க.ஸ்டாலின், அன்பழகன், ஆற்காடு வீராசாமி, துரைமுருகன், கனிமொழி, மத்திய அமைச்சர் சுப்புலட்சுமி ஜெகதீசன் உள்ளிட்டோரும் உடன் இருந்தனர்.
பின்னர் செய்தியாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு முதல்வர் கருணாநிதி பதிலளித்தார்.
கேள்வி - அதிமுகவின் முக்கிய வழக்கறிஞராக இருந்த ஜோதி இங்கே வந்திருப்பது குறித்து சொல்ல முடியுமா?
கருணாநிதி - திமுக ஆட்சியில் தமிழகம் இருண்டு கிடக்கிறது என்று இன்றுதான் (நேற்று) ஜெயலலிதா ஒரு அறிக்கையில் சொல்லியிருந்தார். அதனால்தான் இருண்டு கிடக்கிற தமிழகத்தை ஒளிபெறச் செய்ய ஜோதியை அனுப்பியிருக்கிறார்.
கேள்வி - கடந்த சில நாட்களுக்கு முன்புதான் ஜோதி, ஜெயலலிதா மீது 113 வழக்குகள் உள்ளன. ஆனால் அவரை நேரில் சந்தித்து ஆலோசனைகள் பெறக் கூட அங்கு சூழ்நிலை இல்லை. அந்த அளவுக்கு சிலருடைய ஆதிக்கத்தின் கீழ் அவர் கட்டுண்டு இருக்கிறார் என்று குற்றம் சாட்டியிருந்தார். அதுகுறித்து உங்களது கருத்து என்ன?
கருணாநிதி - அது சில பத்திரிக்கைகளில்தான் வந்தது. எல்லா பத்திரிகைகளிலும் வரவில்லை.
கேள்வி - ஜோதி, திமுகவில் உறுப்பினராகி விட்டாரா?
கருணாநிதி - இன்று உறுப்பினர் படிவத்தில் கையெழுத்திட்டு உறுப்பினராகியுள்ளார்.
கேள்வி - திமுகவில் ஜோதிக்கு பொறுப்பு வழங்கப்படுமா?
கருணாநிதி - இப்போது பொறுப்போடு பதில் சொல்லிக் கொண்டிருக்கிறாரே, இதை விட என்ன பெரிய பொறுப்பு வேண்டும்.
கேள்வி - திறமையான வழக்கறிஞரான ஜோதியை, திமுக எந்தவிதத்தில் பயன்படுத்திக் கொள்ளப் போகிறது?
கருணாநிதி - பொறுத்திருந்து பாருங்கள்.