அதிமுக ஒ.செ.க்கு வெட்டு-திமுகவினரை கைது செய்ய ஜெ கோரிக்கை
சென்னை: தூத்துக்குடி ஒன்றிய அதிமுக செயலாளர் வி.பி.ஆர்.சுரேஷை தாக்கிய திமுகவினரை உடனே கைது செய்ய வேண்டும் என அதிமுக பொதுச்செயலாளர் ஜெயலலிதா கூறியுள்ளார்.
அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
தமிழகத்தில் ஏற்பட்டுள்ள பெருமழை காரணமாக, தூத்துக்குடி மாவட்டம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி ஒன்றியத்தைச் சேர்ந்த பாதிக்கப்பட்ட மக்கள் தங்களுக்கு நிவாரணப் பணிகள் மற்றும் உதவிகளை வழங்கக் கோரி 22ம் தேதி சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சாலை மறியலில் ஈடுபட்ட மக்களை நேரில் சென்று சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிகளைச் செய்யாமல், அரசு அதிகாரிகள் மற்றும் காவல் துறையினர் முன்னிலையிலேயே திமுகவைச் சேர்ந்த தூத்துக்குடி ஒன்றிய குழு தலைவர் கருணாகரன் தலைமையிலான சிலர் பாதிக்கப்பட்ட மக்களை கடுமையாக தாக்கினர்.
இதனை அறிந்த அதிமுக தூத்துக்குடி ஒன்றிய செயலாளர் வி.பி.ஆர்.சுரேஷ் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று பொதுமக்களோடு சாலை மறியலில் கலந்து கொண்டு திமுகவினரை கண்டித்ததோடு மட்டும் அல்லாமல் பாதிக்கப்பட்ட மக்களைத் தாக்கிய தூத்துக்குடி ஊராட்சி ஒன்றியக் குழு தலைவர் கருணாகரன் மற்றும் திமுகவினரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.
கருணாகரன் மற்றும் தாக்குதல் நடத்திய திமுகவினரை கைது செய்வதாக காவல் துறையினர் அளித்த உறுதி மொழியின் பேரில் சாலை மறியல் போராட்டம் கைவிடப்பட்டது.
வி.பி.ஆர்.சுரேசின் மக்கள் பணியைக் கண்டு பொறுக்காமல் ஆத்திரம் அடைந்த திமுகவைச் சேர்ந்த ரவுடிக் கும்பல் அரிவாள், கம்பு உள்ளிட்ட ஆயுதங்களுடன் யாரும் இல்லாத நேரத்தில் ஒன்றிய கழக அலுவலகத்தில் இருந்த வி.பி.ஆர்.சுரேசை தலையிலும், கையிலும் சரமாரியாக வெட்டி விட்டு சென்றிருக்கிறது.
பலத்த காயமடைந்த வி.பி. ஆர்.சுரேஷ் தூத்துக்குடி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, தற்போது சிறப்பு சிகிச்சைக்காக மதுரையில் உள்ள தனியார் மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
ஜனநாயக முறையில் மக்களுக்கு ஆதரவாக செயல்பட்டார் என்ற ஒரே காரணத்திற்காக வி.பி.ஆர்.சுரேஷ் தாக்கப்பட்டுள்ளார் என்ற செய்தி எனக்கு மிகுந்த மன வருத்தத்தை அளிக்கிறது. இத்தகைய வன்முறைச் செயல்களுக்கு எனது கடுமையான கண்டனத்தை தெரிவித்துக் கொள்வதுடன், வி.பி.ஆர்.சுரேஷ் மற்றும் பொதுமக்கள் மீது தாக்குதல் நடத்தியவர்கள் மற்றும் தாக்குதலுக்கு காரணமாக இருந்தவர்கள் ஆகியோர் மீது காவல் துறை உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி கேட்டுக் கொள்கிறேன்.
படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் வி.பி.ஆர்.சுரேஷ் விரைவில் பூரண நலமடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கிறேன்.
இவ்வாறு ஜெயலலிதா கூறியுள்ளார்.