இழப்பீடு தராத வேலூர் கலெக்டர் கார், அலுவலகம் ஜப்தி
வேலூர்: கையகப்படுத்திய நிலத்துக்கு இழப்பீடு தராமல் இழுத்தடித்த கலெக்டர் கார் மற்றும் அலுவலகத்தை ஜப்தி செய்ய கோர்ட் உத்தரவிட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
வேலூர் மாவட்டம் அப்துல்லாபுரத்தை சேர்ந்தவர் செல்வராஜ்.
கடந்த 1993ம் ஆண்டில் இவரது நிலத்தை சென்ட் ரூ100 வீதம் ஆதிதிராவிடர் நலத்துறை மூலம் மாவட்ட நிர்வாகம் கையகப்படுத்தியது.
ஆனால் சென்ட் ஒன்றுக்கு ரூ. 1000 வீதம் தனது நிலத்துக்கு மாவட்ட நிர்வகம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று வேலூர் மாவட்ட நீதி மன்றத்தில் செல்வராஜ் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கை விசாரித்த நீதிமன்றம் செல்வராஜ் நிலத்துக்கு ஒரு சென்ட்க்கு ரூ 1000 வீதம் இழப்பீடு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டது. இந்த தொகையை வழங்காமல் மாவட்ட நிர்வாகம் காலதாமதம் செய்து வந்தது.
இதனால் கோர்ட் உத்தரவை நிறைவேற்றக் கோரி மாவட்ட நீதிமன்றத்தில் மீண்டும் மனுதாக்கல் செய்தார் செல்வராஜ்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி, வேலூர் ஆதிதிராவிடர் நல அலுவலம் மற்றும் கலெக்டரின் வாகனங்களை ஜப்தி செய்ய உத்தரவிட்டார்.
இதையடுத்து நீதிமன்ற அமீனாக்கள் நேற்று வேலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர். இந்த நிலையில் உயர் அதிகாரிகள் நீதிமன்ற அமீனாவிடம் ஒரு வார கால அவகாசம் வேண்டினர். அதற்குள் செல்வராஜுக்கு சேரவேண்டிய இழப்பீடை வழங்குவதாக உறுதிமொழி அளித்தனர்.
இதனால் நீதிமன்ற அமீனாக்கள் தற்காலிகமாக திரும்பி சென்றனர்.