For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

'மது'- எம்ஜிஆர் கருத்தே எங்கள் கருத்து: அரசு

By Staff
Google Oneindia Tamil News

சென்னை: மூன்று கிலோமீட்டருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும், உயிர் காக்கும் மருந்துகள் வேண்டும் என்று கேட்டால் விதிமுறைகளை காட்டுகிறீர்கள். ஆனால், மதுக் கடைகளை மட்டும் மூன்று கிலோமீட்டருக்கு ஒன்று திறக்க அரசுக்கு எப்படி வசதி வந்தது? என்று சட்டசபையில் பாமக கேள்வி எழுப்பியது.

சட்டசபையில் பட்ஜெட் மீது நடந்த விவாதம்:

மணியன் (பாமக): தமிழகத்தில் எதற்கெடுத்தாலும் குடிக்கின்றனர். வாழ்வுக்கும் குடிக்கின்றனர், சாவுக்கும் குடிக்கின்றனர். வீட்டுக்கு ஒரு குடிகாரர் என்ற நிலை உள்ளது.

இந்த ஆண்டு டாஸ்மாக் வருமானம், 10 ஆயிரம் கோடி ரூபாயை எட்டும் என மதிப்பிடப்பட்டுள்ளது. அரசைப் பொறுத்தவரை, அது தண்ணி மூலம் கிடைக்கும் வருமானம். எங்களைப் பொறுத்தவரை அது பெண்களின் கண்ணீரில் கிடைக்கும் வருமானம். அதிமுகவும் திமுகவும் போட்டி போட்டுக் கொண்டு மதுக் கடைகளை திறந்துள்ளன.

துணை சபாநாயகர் துரைசாமி: ஒருவரை பகைத்துக் கொண்டால் பரவாயில்லை. இரண்டு தரப்பையும் பகைத்துக் கொண்டால், நீங்கள் எங்கு நிற்பீர்கள்?

பெங்களூர்.. பாண்டிச்சேரி...:

உணவுத்துறை அமைச்சர் வேலு: தமிழகத்தைச் சுற்றி கர்நாடகா, ஆந்திரா, புதுச்சேரி ஆகியவற்றில் மது விற்பனை நடக்கிறது. முன்பு சனி, ஞாயிறுகிழமைகளில் புதுச்சேரியிலும், பெங்களூருவிலும் உள்ள பார்கள் தமிழகத்தைச் சேர்ந்தவர்களால் நிரம்பி வழியும். அப்படி வருமானம் மற்ற மாநிலங்களுக்கு போய்க் கொண்டிருந்தது. அதை தடுக்கத் தான் இங்கு கடைகள் திறக்கப்பட்டுள்ளன.

மணியன்: மகாராஷ்டிராவில் படிப்படியாக மதுக் கடைகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது. மது நாட்டுக்கும், வீட்டுக்கும், உடல் நலத்துக்கும் கேடு என்று பாட்டிலில் போட்டு விட்டு, அரசே அதை விற்கிறது.

மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி: மது விலக்கை தமிழகத்தில் மட்டும் அமல்படுத்தினால் சரியாக இருக்காது. இந்தியா முழுவதும் அமல்படுத்த வேண்டும். மற்ற மாநிலங்களில் விற்கலாம். தமிழகத்தில் மட்டும் கூடாது என்பது எந்த வகையில் நியாயம்?.

மது விலக்கை அமல்படுத்தினால் கள்ளச் சாராயம் ஆறாக ஓடும். லட்சக்கணக்கான ஏழைகள் சிறைக்கு செல்ல நேரிடும். இந்த காரணத்தைக் கூறித் தான் எம்.ஜி.ஆர். மது விற்பனையை கொண்டு வந்தார். அதே கருத்தை தான் இந்த அரசும் கொண்டுள்ளது.

அன்புமணியிடம் சொல்லுங்கள்.. ஆற்காடு:

வேல்முருகன் (பாமக): போலீஸாருக்கு கடுமையாக உத்தரவு போட்டு, கள்ளச் சாராயத்தை ஒழிக்க நடவடிக்கை எடுக்க முடியும்.

அமைச்சர் ஆற்காடு வீராசாமி: டாஸ்மாக் கடைகள் இருப்பதால் தான் தமிழகத்தில் கள்ளச் சாராயம் இல்லை. மூடி விட்டால், சாராயம் ஆறாக ஓடும். மத்தியில் அமைச்சராக உள்ள அன்புமணியிடம் கூறி, பிரதமரிடமும் சோனியாவிடமும் பேசி, இந்தியா முழுக்க மது விலக்கை அமல்படுத்துமாறு வலியுறுத்தச் சொல்லுங்கள். அப்படி நடந்தால், இங்கும் மது விலக்கை அமல்படுத்த தயார்.

மணியன்: மூன்று கிலோமீட்டருக்கு ஒரு ஆரம்ப சுகாதார நிலையம் வேண்டும், உயிர் காக்கும் மருந்துகள் வேண்டும் என்று கேட்டால் விதிமுறைகளை காட்டுகிறீர்கள். ஆனால், மதுக் கடைகளை மட்டும் மூன்று கிலோமீட்டருக்கு ஒன்று திறக்க வசதி வந்தது? என்றார்.

அறங்காவலர் நியமனம்:

முன்னதாக நடந்த விவாதத்தில் பேசிய காங்கிரஸ் உறுப்பினர் யசோதா,

பெருமாள் கோவில்களில் அறங்காவலர்களாக ஆதிதிராவிடர்கள் இடம் பெறுவதில்லை. ராமானுஜர் கும்பாபிஷேக திருவிழா கமிட்டியில் கூட, ஆதிதிராவிடர்களை சேர்க்கவில்லை. பிராமணர், பிராமணரல்லாதோர் என்று தான் அறங்காவலர் நியமனம் உள்ளது.

அறநிலையத்துறை அமைச்சர் பெரிய கருப்பன்: நீதிமன்ற உத்தரவுப்படி தான் செய்யப்பட்டுள்ளது. வழக்கு நிலுவையில் இருப்பது உறுப்பினருக்கு தெரிந்திருந்தும், இதை ஒரு குற்றச்சாட்டாக கூறக்கூடாது.

யசோதா: கோர்ட் உத்தரவிட்ட பின்னர் அதை மாற்ற, அரசு நடவடிக்கை எடுத்துள்ளதா?. கோவில் நிலங்கள் கொள்ளை போகின்றன. எனது தொகுதியில் பல நீர்பிடிப்பு பகுதிகளில் ஏரிகள், குளங்களை காணவில்லை. அனைத்தையும் பட்டா போட்டு விட்டனர்.

அரசு சொத்துக்களை பாதுகாக்க வேண்டும். புதிதாக கோர்ட்டுகளை துவக்க வேண்டுமென எம்.எல்.ஏக்கள் கோருகின்றனர். எனது தொகுதிக்கு நான் வாதாடி பெற்ற புதிய கோர்ட் திறப்பு விழாவில் எனது பெயரையே போடவில்லை.

என்னையே கூப்பிடுறதில்ல.. துரைமுருகன்:

சட்ட அமைச்சர் துரைமுருகன்: உங்களது உணர்வுகளில் நானும் பங்கு கொள்கிறேன். கோர்ட் வேண்டும் என்று கேட்பதும், அதற்காக நிதி ஒதுக்கப் போராடுவதும் எம்.எல்.ஏக்கள் தான். எனவே, எம்.எல்.ஏக்கள் பெயரை அழைப்பிதழில் போடுவதில் தவறில்லை.

ஆனால், திறப்பு விழாக்களை அரசு நடத்துவதில்லை. ஐகோர்ட் தான் நடத்துகிறது. அவர்களாக பெயர்களை போட்டு விழா நடத்திக் கொள்கின்றனர். சட்ட அமைச்சர் என்ற முறையில் புதிய கோர்ட் துவக்க, நான் தான் அனுமதியளிக்கிறேன். எனது தொகுதியில் புதிய கோர்ட் திறப்பு விழாவின் போது எனக்கே அழைப்பு இல்லை. இதுபோன்ற நிகழ்ச்சிகளில் எம்.எல். ஏக்கள், எம்.பிக்களை மதித்து அழைக்க வேண்டுமென நானும் சொல்லிப் பார்த்து விட்டேன். ஆனால், அவர்கள் பிடிவாதமாக உள்ளனர் என்றார்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X