கோட்டையில் முதியவர் ஜட்டியுடன் ஓட்டம்- பெண் எஸ்ஐ சஸ்பெண்ட்
சென்னை: கோட்டையில் முதல்வர் வருகையின்போது பாதுகாப்புப் பணியில் கவனக் குறைவாக இருந்ததாக பெண் சப்-இன்ஸ்பெக்டர் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.
முதல்வர் கருணாநிதி நேற்று கோட்டைக்கு வந்த போது ஒரு முதியவர் வேட்டியை அவிழ்த்து விட்டு ஜட்டியுடன் ரோட்டில் ஓடி வந்தார்.
கோட்டையில் நடந்த இந்த சம்பவத்தையடுத்து போலீசார் அவரைப் பிடித்து வடக்கு கடற்கரை காவல் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். அப்போது அவர் காரைக்குடியை சேர்ந்த நாராயணன் (64) என்று தெரியவந்தது.
தனக்கு சொந்தமான 73 சென்ட் நிலத்தை மீட்பது தொடர்பாக முதல்வரிடம் மனு கொடுக்க வந்ததாகக் கூறினார். ஆனாலும் முதல்வரின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவித்ததால் அவர் கைது செய்யப்பட்டு புழல் சிறையில் அடைக்கப்பட்டார்.
கோட்டையில் பலத்த பாதுகாப்பு வளையத்தையு்ம் மீறி முதியவர் ஓடியது குறித்து இணை கமிஷனர் ரவி விசாரணை நடத்தினார்.
இதில் சட்டசபை முன் மாதவரம் துணை கமிஷனர் பன்னீர்செல்வம் மேற்பார்வையில் சப்-இன்ஸ்பெக்டர் திவ்யா தான் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தது தெரியவந்தது.
இதையடுத்து பணியில் கவனக் குறைவாக இருந்ததாக திவ்யாவை இணை கமிஷனர் ரவி சஸ்பெண்டு செய்து உத்தரவிட்டார்.