ஜாகுவார், லேன்ட் ரோவரை கைப்பற்றியது டாடா
லண்டன்: ரூ.1 லட்சம் முதல் ரூ.1 கோடி வரையிலான கார்களை தயாரிக்கும் உலகின் ஒரே கார் தயாரிப்பு நிறுவனம் என்ற புதிய பெருமையை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் பெற்றுள்ளது.
இங்கிலாந்து, போர்ட் நிறுவனத்தின் சொகுசுக் காரான ஜாகுவார் மற்றும் லேன்ட் ரோவர் ஆகிய இரு கார்களின் தயாரிப்பு, உரிமம் உள்ளிட்டவற்றை ரூ. 9200 கோடிக்கு வாங்கியுள்ளது டாடா மோட்டார்ஸ். இதன் மூலம் இந்தப் புதிய சாதனையைப் படைத்துள்ளது டாடா மோட்டார்ஸ்.
ஜாகுவார் மற்றும் லேன்ட் ரோவர் வகை கார்களைத் தயாரித்து விற்கும் உரிமையை டாடா பெற்றுள்ளது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் ஜாகுவார், லேன்ட் ரோவர் பிராண்டுகளின் உரிமையாளரான போர்ட் நிறுவனத்துடன், டாடா மோட்டார்ஸ் கையெழுத்திட்டுள்ளது.
இதன் மூலம் ஜாகுவார், லேன்ட் ரோவர் ஆகிய இரு பிராண்டுகளும், அதன் தயாரிப்புத் தொழிற்சாலைகளும், இன்ன பிற உரிமைகளும் டாடா வசம் வந்துள்ளது.
ஜாகுவார், லேன்ட் ரோவர் கார்கள் இங்கிலாந்தின் ஹேல்வுட், கேஸில் புரோம்விச், சோலிஹல் ஆகிய இடங்களில் தயாரிக்கப்பட்டு வருகின்றன. இந்த மூன்று தொழிற்சாலைகளும் தற்போது டாடா வசம் வந்துள்ளது. இங்கு மொத்தம் 15 ஆயிரம் தொழிலாளர்கள் பணியாற்றுகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாகுவார் மார்க் வகை கார்கள் தற்போது வெளிநாடுகளில் ரூ. 50 லட்சம் வரை விற்கிறது. அதை இந்தியாவுக்குக் இறக்குமதி செய்தால் ரூ. 1 கோடி வரை விலை வரும் என்பது குறிப்பிடத்தக்கது.
ஜாகுவாரை டாடா பெற்றுள்ளதன் மூலம் உலக அளவில் புகழ் பெற்று விளங்கும் கார் நிறுவனங்களான பிஎம்டபிள்யூ, ஆடி வரிசையில் டாடா மோட்டார்ஸும் இணைந்துள்ளது.
2 மாதங்களுக்கு முன்புதான் உலகின் மிகவும் விலை குறைந்த காரான டாடா நானோவை, டாடா மோட்டார்ஸ் அறிமுகப்படுத்தியது.
வெளிநாட்டு நிறுவனம் ஒன்றை டாடா வாங்கியுள்ளது இது முதல் முறையல்ல. ஏற்கனவே கடந்த ஆண்டு ஜனவரி மாதம் ஆங்கிலோ-டச்சு ஸ்டீல் நிறுவனமான கோரஸ் நிறுவனத்தை டாடா நிறுவனத்தை கையகப்படுத்தியது டாடா.
ஆனால் ஜாகுவார் உரிமையை டாடா வாங்கியுள்ளதை அமெரிக்க மக்கள் ஏற்பார்களா என்பது சந்தேகம்தான் என்கிறார் அமெரிக்காவுக்கான ஜாகுவார் டீலர் கென் கோரின்.
இதுகுறித்து அவர் கூறுகையில், ஜாகுவார் வகைத் தயாரிப்புகளின் உரிமையை இந்திய நிறுவனம் ஒன்று வைத்திருப்பதை அமெரிக்கர்கள் ஏற்பார்கள் என்று தெரியவில்லை. உலகின் விலை உயர்ந்த சொகுசுக் கார் ஒன்று இந்தியாவில் தயாரிக்கப்படுகிறது என்பதை அமெரிக்கர்களால் நிச்சயம் ஜீரணிக்க முடியாது. இந்த சவாலை டாடா மோட்டார்ஸ் எப்படி சமாளிக்கப் போகிறது என்று தெரியவில்லை என்கிறார் அவர்.
ஆனால் சவால்களை சாதனைகளாக மாற்றியே பழக்கப்பட்ட ரத்தன் டாடா, இந்த சவால்களுக்கும் நிச்சயம் 'டாட்டா' காட்டுவார் என்று நம்பலாம்.