சொத்து வரி உயர்வு-ஜெயலலிதா எதிர்ப்பு
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில்,
தமிழகத்தில் உள்ள அனைத்து மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி அமைப்புகளுக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள சொத்துக்களுக்கான வரியை வருகிற 1ம் தேதி முதல் பன்மடங்கு உயர்த்துவதற்கான ஆணையை அரசு பிறப்பித்துள்ளது.
வீட்டு உபயோகக் கட்டிடங்களுக்கு 25 சதவீதம், தொழிற் கட்டிடங்களுக்கு 100 சதவீதம், வணிகக் கட்டிடங்களுக்கு 150 சதவீதம் அளவிலும் உயர்த்துவதற்கான அறிவுரைகளை அனைத்து மாநகராட்சி ஆணையர்கள், நகராட்சி நிர்வாக ஆணையர்கள், பேரூராட்சிகளுக்கான இயக்குநர் ஆகியோருக்கு அரசு வழங்கியுள்ளது.
இதற்கான பணிகள் வரும் ஜூன் 30ம் தேதிக்குள் முடிக்கப்பட வேண்டும் என்று ஆணையிட்டுள்ளது. சொத்து வரியை உயர்த்தினால், அதன் அடிப்படையில் குடிநீர் வரியும் உயர வாய்ப்பு இருக்கிறது. அரசின் இச்செயல் மிகவும் கண்டிக்கத்தக்கது.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றியமைக்கப்பட வேண்டிய சொத்து வரி 1.10.2003 முதல் மாற்றி அமைக்கப்பட்டிருக்க வேண்டும். ஆனால் மக்கள் மீது சுமையை திணிக்கக் கூடாது என்ற அடிப்படையில், எனது ஆட்சிக்காலத்தில், அப்போது சொத்து வரி ஏதும் மாற்றப்படவில்லை.
ஆனால் இப்போது சொத்து வரி 1.4.2008 முதல் அதாவது ஆறு மாதங்களுக்கு முன்பாகவே மாற்றி அமைக்கப்பட வேண்டும் என்று அரசு ஆணையிட்டுள்ளது.
தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பகுதிகளையும் தூய்மையாகவும், வாழ்வதற்கேற்ற வசதிகள் கொண்டதாகவும், மக்களுக்கு உயர்ந்த வாழ்க்கைத் தரத்தை அளிக்கக் கூடியவையாகவும் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியது தமிழக அரசின் கடமையாகும்.
5 ஆண்டுகளுக்கு ஒரு முறை சொத்து வரியை உயர்த்த வேண்டும் என்ற விதியைக் காரணம் காட்டி மக்கள் மீது மேலும் நிதிச்சுமையை சுமத்துவது ஏற்றுக் கொள்ள முடியாதது. இதற்காக வெளியிடப்பட்ட ஆணையை அரசு உடனடியாக ரத்து செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறியுள்ளார்.