இலங்கை-3 தமிழர் கட்சிகள் புது கூட்டணி

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் விரைவில் தேர்தல் நடைபெறவுள்ளது. 20 ஆண்டுகளுக்குப் பிறகு இங்கு முதல் முறையாக தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தத் தேர்தலை கூட்டாக சந்திக்க தமிழீழ மக்கள் விடுதலை கழகம் (பிளாட்), தமிழர் ஐக்கிய விடுதலை முன்னணி (டியுஎல்எப்) மற்றும் ஈழ மக்கள் புரட்சி விடுதலை முன்னணி ஆகியவை முடிவு செய்துள்ளன. இந்த மூன்று கட்சிகளும் சேர்ந்து புதிதாக தமிழர் ஜனநாயக தேசிய கூட்டணி என்ற புதிய கூட்டணியையும் உருவாக்கியுள்ளன.
இதுகுறித்து பிளாட் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் செய்தியாளர்களிடம் கூறுகையில், மே 10ம் தேதி நடைபெறவுள்ள தேர்தலில் தமிழர்களின் ஒற்றுமையைக் காட்டுவதற்காக இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது.
இந்தக் கூட்டணியில் ஈழ மக்கள் ஜனநாயக முன்னணி மற்றும் வேறு சில தமிழர் கட்சிகளையும் இணைக்க பேச்சுவார்த்தை நடத்திக் கொண்டிருக்கிறோம். இதன் மூலம் மிகப் பெரிய கூட்டணியாக இது உருவெடுக்கும். வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாளான ஏப்ரல் 3ம் தேதிக்குள் இந்தக் கூட்டணி இறுதியாகி விடும்.
அரசியல் சட்டத்தின் 13வது திருத்தத்தை முழுமையாக அமல்படுத்த இலங்கை அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் தமிழர்கள் பிரச்சினைக்குத் தீர்வு காண முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. எனவே அதுபோன்ற சமயத்தில் தமிழர் ஒருவர் கிழக்கு மாகாண முதல்வராக இருப்பதே நல்லது என்பதால் இந்தக் கூட்டணி உருவாக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.
இந்தக் கூட்டணி நேற்று இறுதியானது. இதுதொடர்பான ஒப்பந்தத்தில் சித்தார்த்தன், டியுஎல்எப் தலைவர் அனந்தசங்கரி, இபிஆர்எல்எப் உள்ளூர் தலைவர் ஸ்ரீதரன் ஆகியோர் கையெழுத்திட்டுள்ளனர்.
சில மாதங்களுக்கு முன்பு வரை விடுதலைப் புலிகள் வசம் இருந்த கிழக்குப் பகுதியை ராணுவம் கைப்பற்றிய பின்னர் அங்கு முதல் முறையாக தேர்தல் நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications