மனித வெடிகுண்டுகள் சரணடைந்தால் ரூ. 1 கோடி பரிசு, வெளிநாட்டு வேலை
விடுதலைப் புலிகள் இயக்கத்தினரை படை பலம் மூலம் எதிர்த்து வரும் இலங்கை ராணுவம் தற்போது ஆசை வார்த்தை என்ற புதிய ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.
இதுதொடர்பாக புதிய அறிவிப்பு ஒன்றை இலங்கை அரசு வெளியிட்டுள்ளது. அதாவது, விடுதலைப் புலிகளின் மனித வெடிகுண்டு பிரிவினர் அரசிடம் சரணடைய வேண்டும். அப்படி சரணைடவோருக்கு ரூ. 1 கோடி ரொக்கம் தரப்படும். இதுதவிர அவர்களுக்கு வெளிநாட்டில் வேலை பெற்றுத் தரப்படும் என்று அந்த அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக கொழும்பு நகர் உள்பட பல்வேறு இடங்களில் கடந்த சில நாட்களாக போஸ்டர்கள் ஒட்டப்பட்டுள்ளன. இதுகுறித்து இலங்கை அரசின் ராணுவ செய்தி தொடர்பாளர் கெகலிய ரம்புகவெல்லா கூறுகையில், விடுதலைப்புலிகளின் தற்கொலைப்படை பிரிவில் உள்ள மனித வெடிகுண்டு நபர்கள் சரண் அடையும்படி வெளியான அறிவிப்பு அதிகாரபூர்வமானதுதான்.
சரண் அடையும் மனித வெடிகுண்டுகளுக்கு ரூ.1 கோடி ரொக்கப்பரிசும், வெளிநாட்டில் வேலைவாய்ப்பும் வழங்கப்படும் என்பதையும் இலங்கை அரசு ஒப்புக்கொண்டு இருக்கிறது. ஆனால், சரண் அடைகிறோம் என்று சொன்னவுடனேயே பணமும் வேலையும் வழங்கப்பட மாட்டாது.
இதில் சில நடைமுறைகளை பின்பற்ற வேண்டியது இருக்கிறது. இந்த இளைஞர்கள் அமைதியுடன் வாழ்வதற்கு உரிமை உண்டு என்று கருதுகிறேன். இதுவரை சரண் அடைந்த 11 போராளிகளுக்கு வெளிநாட்டில் வேலை வாய்ப்பு அளித்து இருக்கிறோம்.
வேலைவாய்ப்புடன் கூடிய இதுபோன்ற மேலும் 40 வகையான மறுவாழ்வு திட்டங்களை அமல்படுத்தி வருகிறோம் என்றார் அவர்.
கொழும்பில், சரண் அடையும்படி வேண்டுகோள் விடுத்து ஒட்டப்பட்டுள்ள போஸ்டர்களில், வெடித்து சிதறி சிதைந்த நிலையில் உள்ள மனித வெடிகுண்டு ஒருவரின் தலைப்பகுதியின் படமும் இடம் பெற்றுள்ளது.
உடல் பாகங்கள், துண்டு துண்டாக தரையில் சிதறிய நிலையில் சாக விரும்பாதீர்கள். நீங்களும் வாழப்பிறந்தவர்கள்தான். எதற்காக வெடிகுண்டுகளை சுமக்கிறீர்கள்? என்ற வாசகங்கள் அந்த போஸ்டரில் காணப்படுகின்றன.
விடுதலைப் புலிகளின் தற்கொலைப் படையினர் உலக அளவில் மிகவும் பயங்கரமானவர்களாக கருதப்படுகிறார்கள். இவர்களுக்கு கறும்புலிகள் என்று பெயர். இதுவரை 240 தற்கொலைப் படைத் தாக்குதல்கள் நடைபெற்றுள்ளன.