சவுதி போலீஸ் துரத்தல்: 4 பேர் பரிதாப பலி
துபாய்: சவுதி அரேபியாவில் போலீஸ் துரத்தியதில், காரில் பயணம் செய்த 2 ஆண்களும், 2 பெண்களும் விபத்தில் சிக்கி பரிதாபமாக உயிரிழந்தனர்.
சவுதி அரேபியாவின் புனித நகரங்களில் ஒன்றான மதீனாவில் இந்த சம்பவம் நடந்தது.
சவுதி அரேபியாவில் மதக் கட்டுப்பாடுகளும், சம்பிரதாயதங்களும் மிகக் கடுமையாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றன. பொது இடத்தில் ஒழுக்க நெறிமுறைகளை கண்காணிக்க தனியாக மாரல் போலீஸ் பிரிவு உள்ளது.
ஆனால், இந்தப் போலீஸாரின் செயல்கள் அவ்வப்போது சர்ச்சைக்குள்ளாகி ருகின்றன.
சில மாதங்களுக்கு முன்பு காரில் டிரைவருடன் பயணம் செய்த ஒரு பெண்ணை நூற்றுக்கணக்கானவர்கள் முன்பு அவமானப்படுத்தும் வகையில் இந்த போலீஸார் நடந்து கொண்டது பெரும் சர்ச்சையை எழுப்பியது.
இந் நிலையில் இந்த போலீஸாரின் செயலால் 4 உயிர்கள் பலியாகியுள்ளன.
மதீனாவின் புறநகரில் கடந்த மாதம், 2 பெண்கள், 2 ஆண்கள் ஒரு காரில் பயணித்தனர். அந்தக் காரை போலீஸார் தங்களது காரில் துரத்தினர். இதைப் பார்த்து பயந்த நான்கு பேர் பயணம் செய்த கார் வேகமாக சென்றதில் விபத்து ஏற்பட்டு விட்டது.
இதில் காரில் இருந்த நான்கு பேரும் பரிதாபமாக உயிரிழந்தனர். இந்த துயரச் சம்பவத்திற்கு போலீஸார் படு வேகமாக காரில் துரத்தியதே காரணம் என சம்பவத்தை நேரில் பார்த்தவர்கள் விமர்சித்துள்ளனர். இதுகுறித்து விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.