தப்பின தமிழ் சேனல்கள்-கலைஞர் டிவி மட்டும் 'கட்'!!
பெங்களூர்: தமிழ் டிவி சேனல்கள் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்ற கன்னட அமைப்புகளின் மிரட்டலுக்குப் பணிய பெங்களூர் கேபிள் டிவி ஆபரேட்டர்கள் மறுத்துவிட்டனர்.
கலைஞர் டிவியை தவிர மற்ற எந்த சேனலின் ஒளிபரப்பையும் நிறுத்த மாட்டோம் என அறிவித்துள்ளனர்.
தமிழ் சேனல்கள் ஒளிபரப்பை நிறுத்த வேண்டும் என்று கோரி கேபிள் டிவி அலுவலகங்களில் புகுந்து கன்னட ரக்ஷன வேதிகே உள்ளிட்ட அமைப்புகள் ரகளை செய்தனர். இதையடுத்து ஆங்காங்கே தமிழ் சேனல்கள் ஒளிபரப்பு நிறுத்தப்பட்டது.
இந் நிலையில் கர்நாடக கேபிள் டிவி ஆபரேட்டர்கள் சங்கத்தின் அவசரக் கூட்டம் பெங்களூரில் நடந்தது. அதில், தமிழ் சேனல்கள் ஒளிபரப்பை நிறுத்துவதில்லை என்று முடிவெடுக்கப்பட்டது.
அதே நேரத்தில் கன்னட அமைப்புகளை அமைதிப்படுத்தும் வகையில் கலைஞர் டிவி ஒளிபரப்பை மட்டும் நிறுத்த முடிவு செய்யப்பட்டது. இதன் தொடர்ச்சியாக இன்று காலை முதல் பெங்களூர் உள்பட கர்நாடகம் முழுவதுமே கலைஞர் டிவி ஒளிபரப்பு நிறுத்தப்பட்டுள்ளது.
அந்த இடத்தில் லோக்சபா டிவி காட்டப்படுகிறது.
டிடிஎச் பயத்தில் ஆபரேட்டர்கள்:
மாதத்தின் முதன் வாரம் என்பதால் இப்போது தான் கேபிள் டிவிக்கான கட்டணத்தை வசூல் செய்யும் நேரமாகும். தமிழ் சேனல்களை கட் செய்துவிட்டு கட்டண வசூலுக்கு போய் நின்றால் தமிழர்கள் பணம் தர மாட்டார்கள்.
அதே போல பெங்களூரில் தமிழ் சேனல்களைத் தான் பெரும்பாலான கன்னட, கேரள மக்கள் விரும்பி்ப் பார்க்கின்றனர். இதனால் அவர்களிடம் கட்டணம் வசூலிப்பதும் கஷ்டம். இதனால் தமிழ் சேனல்களை ரத்து செய்ய பெரும்பாலான கேபிள் டிவிக்காரர்கள் ஒப்புக் கொள்ளவில்லை.
மேலும் ரூ. 3,000 முதலீட்டில் டி.டி.எச் ஆன்டெனாவை வாங்கி வைத்தால் மாதம் ரூ. 130ல் 80க்கும் மேற்பட்ட சேனல்களை இலவசமாக பார்க்க முடியும் என்ற நிலை வந்துவிட்டது.
காவிரி தொடர்பாக கடந்தமுறை கலாட்டா நடந்த போது, கேபிள் ஆபரேட்டர்கள் தமிழ் சேனல்களை ரத்து செய்தபோது ஆயிரக்கணக்கானவர்கள் டி.டி.எச்க்கு மாறிவிட்டு, கேபிள் டிவி இணைப்பே வேண்டாம் என்று கூறிவிட்டனர்.
இப்போதும் அதே நிலை தான் ஏற்படும் என கேபிள் டிவி ஆபரேட்டர்கள் அஞ்சுகின்றனர். டிடிஎச் மிக வேகமாக பரவி வரும் நிலையில் நிலையில் இனியும் தமி்ழ் தொலைக்காட்சிகளை ஒளிபரப்ப மாட்டோம் என்று கூறினால் தங்களது தொழிலுக்கு தாங்களே ஆப்பு வைப்பதாகவே அமையும் என அவர்கள் அஞ்சுகின்றனர்.
இதனால் தான் கன்னட அமைப்புகளின் கோரிக்கையை ஏற்க அவர்கள் இந்த முறை மறுத்துள்ளனர். தங்களது இக்கட்டான நிலையை கன்னட அமைப்புகளிடம் அவர்கள் விளக்கிவிட்டனர்.
வேண்டுமானால் முதல்வர் கருணாநிதிக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கலைஞர் டிவியை மட்டும் ரத்து செய்கிறோம் என்று கூறி அதை நிறுத்தி வைத்துள்ளனர்.
தமிழ் நாளிதழ்கள் வந்தன:
அதே போல இன்று முதல் தமிழ் நாளிதழ்களை வினியோக்கிக் கூடாது என்று கன்னட அமைப்புகள் எச்சரித்திருந்தன. ஆனால் இன்று தமிழ் நாளிதழ்கள் வழக்கம் போல வினியோகிக்கப்பட்டன.
பெங்களூரிலிருந்து வெளியாகும் தினத்தந்தி, காலைக்கதிர், தினகரன், தினமணி உள்பட அனைத்து நாளிதழ்களும் வழக்கம் போல விற்கப்பட்டன.