சென்னை: கடத்தப்பட்ட சிறுமி மீட்பு-பாதிரியார் கைது
சென்னை: சென்னையில் 2ம் வகுப்பு படித்து வரும் மாணவியைக் கடத்திச் சென்று ரூ. 15 லட்சம் கொடுத்தால்தான் விடுவிப்போம் என்று மிரட்டிய பாதிரியார் கைது செய்யப்பட்டார். சிறுமியும் பத்திரமாக மீட்கப்பட்டாள்.
சென்னை அண்ணா நகரில் உள்ள அண்ணா ஆதர்ஷ் பள்ளியில், 2ம் வகுப்பு படித்து வரும் 7 வயது மாணவி ரூபியா. இவரது வீடு பெரம்பூர் ஜி.கே.எம்.காலனியில் உள்ளது. தந்தை அம்ஜத் உசேன் காண்டிராக்ட் தொழில் செய்து வருகிறார்.
நேற்று காலை வழக்கம் போல பள்ளிக்கு வந்த ரூபியா மாலையில் வீடு திரும்பவில்லை. மேலும் மதியத்திற்கு மேல் பள்ளியிலும் காணவில்லை. இதையடுத்து பள்ளி ஆசிரியர்கள் பள்ளி முழுவதும் தேடினர். எங்கும் ரூபியா இல்லை.
இதையடுத்து பள்ளித் தலைமை ஆசிரியர் பெற்றோருக்குத் தகவல் கொடுத்தார். பதறி அடித்து அவர்கள் ஓடி வந்தனர். இந்த நிலையில் அம்ஜத் உசேனுக்கு ஒரு போன் வந்தது. அதில் பேசிய நபர், குழந்தையை கடத்தியுள்ளோம். ரூ. 15 லட்சம் கொடுத்தால்தான் விடுவோம். போலீஸுக்குப் போகக் கூடாது என்று கூறியுள்ளார்.
இதையடுத்து அண்ணா நகர் காவல் நிலையத்தில் உசேன் புகார் கொடுத்தார். உடனடியாக போலீஸார் நடவடிக்ைகயில் இறங்கினர். தொலைபேசி எங்கிருந்து வந்தது என்பதை கண்டுபிடித்தனர். ஒரு பிசிஓ விலிருந்து போன் செய்யப்பட்டிருப்பது தெரிய வந்தது.
இந்த நிலையில் ரூபியாவின் தந்தைக்கு மீண்டும் போன் வந்தது. அதில் பேசிய நபர், நாங்கள் கூறியதை கேட்காமல் போலீஸாரிடம் சென்று விட்டீர்கள். எனவே ரூபியாவைக் கொலை செய்யப் போகிறோம் என்று அதில் பேசிய நபர் மிரட்டி விட்டு போனை வைத்து விட்டார். இதனால் உசேன் குடும்பத்தினர் பெரும் கவலையில் ஆழ்ந்தனர்.
இந்த நிலையில் சிறுமியை மீட்க போலீஸார் நடவடிக்கையை முடுக்கி விட்டனர். இதில் இன்று காலை சிறுமி பத்திரமாக மீட்கப்பட்டாள். செங்குன்றம் அருகே ஒரு சர்ச்சில் சிறுமி மறைத்து வைக்கப்பட்டிருந்தாள். அவளைக் கடத்தி மறைத்து வைத்து, பணம் கேட்டு மிரட்டிய பாதிரியார் உள்ளிட்ட நான்கு பேர் கொண்ட கும்பலும் கைது செய்யப்பட்டது.
கடத்தல்காரர்கள் சிக்கியது எப்படி?:
போலீஸார் நடத்திய விசாரணையில் கடத்தல்காரர்களுக்கு சிம்கார்டு விற்ற ஆனந்த் குமார் மற்றும் நரேஷ் என்ற இரண்டு பேர் பிடிபட்டனர். அவர்களை போலீசார் கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வந்தனர்.
இந்த நிலையில், குழந்தையின் தந்தைக்கு இன்று காலை மீண்டும் ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது. அதில் குழந்தையை யாரோ காரில் வந்து தன்னுடைய வீட்டில் விட்டு விட்டு சென்றதாக செங்குன்றத்தை அடுத்த காவாங்கரையை சேர்ந்த ஒருவர் கூறியுள்ளார்.
இதையடுத்து போலீசார் காவாங்கரை விரைந்தனர். அங்குள்ள ஒரு சர்ச்சில் இருந்து குழந்தையை மீட்டனர். அந்த குழந்தையிடம் நடத்தப்பட்ட விசாரணையில் நேற்று மாலை பள்ளி அருகே விளையாடிக் கொண்டிருந்த போது ஒருவன் பைக்கில் வந்து தன்னை அழைத்துச் சென்றதாகவும் பின்னர் காரில் வைத்து சுற்றியதாகவும் தெரிவித்தாள்.
இந்த கடத்தல் நாடகம் குறித்து மாநகர காவல்துறை ஆணையர் நாஞ்சில் குமரன் கூறுகையில், கடத்தப்பட்ட அண்ணாநகரை சேர்ந்த சிறுமி காவாங்கரையிலிருந்து இன்று மீட்கப்பட்டார். பாதிரியாருக்கு படித்த பிரேம் கார்த்திக் (வயது 25) என்ற வாலிபரை போலீசார் கைது செய்துள்ளோம்.
வேலை எதுவும் செய்யாத இவருக்கு ஏராளமான கடன்கள் இருப்பதாக தெரிகிறது. நண்பர்கள் கொடுத்த ஆலோசனையில் இவர் இந்த கடத்தலில் ஈடுபட்டதாக தெரிய வந்துள்ளது.
தொடர்ந்து இவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர் என்றார் அவர்.
குழந்தையை காரில் வைத்தும், பைக்கில் வைத்தும் சுற்றிய ஹரிஹரன் என்பவரும் போலீஸ் வசம் சிக்கியுள்ளார்.
ரூபியா பத்திரமாக திரும்பியது குறித்து அவளது பெற்றோர் ஆனந்தக் கண்ணீருடன் போலீஸாருக்கு நன்றி தெரிவித்தனர்.












Click it and Unblock the Notifications