தமிழர்கள் தாக்கப்படுவதை வேடிக்கை பார்க்க முடியாது-கருணாநிதி

முதல்வர் கருணாநிதி பிரதமர் மன்மோகன் சிங், காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி ஆகியோருக்கு இன்று அவசரக் கடிதம் ஒன்றை அனுப்பியுள்ளார். அதன் நகலை கர்நாடக முன்னாள் முதல்வர் எஸ்.எம்.கிருஷ்ணாவுக்கும் அனுப்பி வைத்துள்ளார்.
அக்கடிதத்தில், ஓகனேக்கல் கூட்டுக் குடிநீர்த்திட்டம் தொடர்பாக நான் பேசிய பேச்சுக்கள்தான் கர்நாடகத்தில் வன்முறையைத் தூண்டி விட்டு விட்டதாக முன்னாள் முதல்வரும், மூத்த காங்கிரஸ் தலைவருமான எஸ்.எம்.கிருஷ்ணா பேசியிருப்பது இரக்கமற்ற வார்த்தைகள். அவரது கருத்து எனக்கு வருத்தம் தருகிறது.
சென்னை கூட்டத்தில் நான் பேசியபோதோ அல்லது சட்டசபையில் இதுதொடர்பாக ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட தீர்மானத்திலோ எந்த கடுமையான வார்த்தையும் இடம் பெறவில்லை என்பதை உங்களது கவனத்திற்குக் கொண்டு வர விரும்புகிறேன்.
இரு மாநிலத்தவரும் சகோதரர்கள். எனவே நாம் மோதிக் கொள்ளக் கூடாது. சில சமூக விரோதிகள் இந்த விவகாரத்தை தூண்டி விட்டு பெரிதுபடுத்துவார்கள். அவர்களுக்கு நாம் இடம் கொடுத்து விடக் கூடாது என்பதற்காகவே நான் பொறுமையாக இருக்கிறேன் என்றுதான் நான் பேசியிருந்தேன்.
எனது பேச்சை முழுமையாக, கவனமாக படித்துப் பார்த்தால், நான் தவறாகப் பேசவில்லை என்பதை யாருமே புரிந்து கொள்வார்கள்.
என்னை தாங்கள் நன்கு அறிந்தவர் என்பதால் நான் அதுபோல பேசியிருக்க மாட்டேன் என்று நீங்கள் நம்புவீர்கள். அப்படிப்பட்ட வன்முறையைத் தூண்டும் வகையிலான பேச்சை நான் பேசியிருப்பேன் என்று உங்களால் கற்பனை செய்து கூட பார்க்க முடியாது.
தமிழக மக்களின் உரிமைகளை உணர்ந்து, அதற்கு நீங்கள் ஆதரவு தருவீர்கள் என்று நம்புகிறேன். கர்நாடகத்தில் வாழும் தமிழர்களுக்கு எதிரான வன்முறையைத் தடுத்து நிறுத்த உடனடியாக தலையிடுவீர்கள் என்றும் நம்புகிறேன்.
ஒரு முதல்வராக, அண்டை மாநிலகத்தில் தமிழக பேருந்துகளைத் தாக்குவதையும், தமிழ்ப் படங்கள் திரையிட்ட தியேட்டர்களைத் தாக்குவதையும், தமிழக மக்கள் தாக்கப்படுவதையும், தமிழ்ச் சங்கத்தின் அலுவலகம் தாக்கப்படுவதையும், பெங்களூரில் வசிக்கும் தமிழர்கள் தொடர்ந்து பய உணர்வுடனேயே வாழும் நிலையையும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என்று கூறியுள்ளார் கருணாநிதி.












Click it and Unblock the Notifications