பெங்களூர்: அரசு பஸ் போக்குவரத்து முழு அளவில் சகஜமாவது எப்போது?
ஓசூர்: கர்நாடகத்தில் நிலைமை சகஜமாகி, பெங்களூருக்கு தனியார் பேருந்துகள் ஓட ஆரம்பித்து விட்ட நிலையிலும், தமிழக அரசுப் பேருந்துகள் இன்னும் முழு அளவில் இயக்கப்படவில்லை.
பெரும்பாலான பேருந்துகள் தமிழக எல்லை வரை மட்டுமே இயக்கப்பட்டு வருவதால், பெங்களூரில் பணியாற்றி வரும் தமிழக பயணிகள் பாதிப்படைந்துள்ளனர்.
கர்நாடகத்தின் பிற பகுதிகளுக்கு தமிழக அரசுப் பேருந்துகள் இயக்கம் ஓரளவுக்கு சீராகிவிட்ட நிலையில் பெங்களூருக்கு முழு அளவில் இன்னும் பேருந்துகள் இயக்கப்படவில்லை.
ஓகேனக்கல் கூட்டு குடிநீர் திட்டத்தை எதிர்த்து கன்னட அமைப்புகள் போராட்டம் நடத்தின. அப்போது அரசுப் பேருந்துகள் தாக்கப்பட்டதால், கடந்த ஒரு வாரத்திற்கும் மேலாக அரசுப் பேருந்துகள் கர்நாடகத்திற்கு இயக்கப்படவில்லை.
தற்போது இரு மாநிலங்களிலும் அமைதி திரும்பி விட்டது. இதனால் வழக்கம் போல கர்நாடக அரசுப் பேருந்துகள் தமிழகத்திற்கு வந்து செல்கின்றன. தமிழகத்திலிருந்து ஓசூர் வழியாக தனியார் பேருந்துகள், பிற வாகனங்கள் வழக்கம் போல செல்லத் தொடங்கியுள்ளன.
இருப்பினும் சில அரசுப் பேருந்துகள் தவிர மற்றவை இன்னும் தமிழக எல்லையைத் தாண்டாமல் அத்திப்பள்ளி வரை மட்டுமே சென்று வருகின்றன.
சனி, ஞாயிறு மற்றும் உகாதி விடுமுறை என மூன்று நாள் விடுமுறைக்குப் பின்னர் பெங்களூரில் பணியாற்றி வரும் சாப்ட்வேர் என்ஜீனியர்கள் உள்ளிட்டோர் இன்று பெங்களூர் திரும்ப சிரமப்பட்டனர்.
ஒசூர், அத்திப்பள்ளி ஆகிய இடங்களில் இறங்கி தனியார் பேருந்துகளிலும் கர்நாடக அரசுப் பேருந்துகளிலும் பெங்களூர் செல்ல வேண்டிய நிலை நிலவுகிறது.
இதனால் ஓசூர் பஸ் நிலையத்தில் பெரும் காணப்பட்டது. கர்நாடகத்தின் ஆனேகல் போன்ற இடங்களுக்கு பேருந்துகளின் மேற்கூரைகளிலும் அமர்ந்து பலர் பயணம் செய்ததைக் காண முடிந்தது.
மற்றபடி லாரிகள், வேன்கள், கார்கள் ஆகியவை வழக்கம்போல்
ஓடிக்கொண்டிருக்கின்றன.
இதற்கிடையே, ஓகேனக்கலில் தற்போது 24 மணி நேர பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. கர்நாடகத்தில் சட்டசபைத் தேர்தல் முடியும் வரை அங்குள்ளவர்கள் தண்ணீரை வைத்து அரசியல் செய்வார்கள் என்பதால், அங்கு தொடர்ந்து 24 மணி நேரமும் பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
தற்போது ஓகேனக்கலில் போராட்டங்கள் குறைந்துள்ளதால், அங்கு பரிசல் போக்குவரத்து சுமூகமாகியுள்ளது. மீண்டும் சுற்றுலாப் பயணிகளும் அளவில் வரத் தொடங்கியுள்ளனர்.
தமிழகப் பகுதியில் 300 பரிசல்களும், மாறுகொட்டாயிலிருந்து கர்நாடகப் பகுதிக்கு அம்மாநிலத்தவரின் 70 பரிசல்களும் இயக்கப்பட்டு வருகின்றன.