தொழில் போட்டி: டிடிஎச் ஆபரேட்டர்களுக்கு ரூ.1400 கோடி இழப்பு!

நம் நாட்டில் டிடிஎச் சேவையை வழங்கிவரும் டிஷ் டிவி, டாடா ஸ்கை நிறுவனங்களுக்கு மொத்தம் 50 லட்சம் வாடிக்கையாளர்கள் உள்ளனர். வாடிக்கையாளர்களை பிடிப்பதற்காக இரு நிறுவனங்களும் போட்டிபோட்டுக் கொண்டு கவர்ச்சி திட்டங்களை அறிவித்தன.
மேலும், டிடிஎச் ஒளிபரப்பை பெறுவதற்கான செட் டாப் பாக்ஸ்களை அதன் அடக்க விலையில் இருந்து மிகவும் மலிவான விலைக்கு வழங்கின. இதனால் ஒரு செட் டாப் பாக்சுக்கு ஆயிரக்கணக்கான ரூபாய் இழப்பு ஏற்பட்டது.
இந்நிலையில் டிடிஎச் சேவையில் புதிதாக காலடி வைத்துள்ள அனில் அம்பானியின் ரிலையன்ஸ் நிறுவனம், பார்த்தி மற்றும் சன் டைரக்ட் நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு அதிநவீன எம்பிஜி-4 ரக செட்டாப் பாக்ஸ்களை மிகக் குறைந்த விலைக்கு வழங்குகின்றன. இந்த வகை செட் டாப் பாக்ஸ் மூலம் தொலைபேசி, விரும்பும் சினிமாக்கள், இன்டர்நெட், கேம்ஸ் போன்ற கூடுதல் வசதிகளையும் வழங்கலாம்.
தற்போது டிஷ் டிவி, டாடா ஸ்கை நிறுவனங்கள் வழங்கிவரும் எம்பிஜி-2 ரக செட் டாப் பாக்ஸ்களில் இந்தளவுக்கு வசதிகள் இல்லை. இந்த செட் டாப் பாக்ஸ் மற்றும் நிர்மாணக் கட்டணங்களுக்கே தலா ஒரு வாடிக்கையாளருக்கு ரூ. 1600 முதல் ரூ. 2300 வரை டிடிஎச் நிறுவனங்கள் நஷ்டம் அடைகின்றன.
எம்பிஜி-4 ரக செட் டாப் பாக்ஸ்களுக்கு மேலும் 30 சதவீத நஷ்டம் ஏற்படும். இதனால் நடப்பு நிதியாண்டில் டிஷ் டிவிக்கு ரூ.350 கோடியும், டாடா ஸ்கை நிறுவனத்துக்கு ரூ.1100 கோடியும் கூடுதலாக இழப்பு ஏற்படும் என்று பொருளாதார நிபுணர்கள் தெரிவித்தனர். இது பற்றி கருத்து கூற டாடா ஸ்கை நிறுவனம் மறுத்துவிட்டது.
புதிய நிறுவனங்கள் கூடுதல் சேவைகளை வழங்குவதால் அவற்றுக்கு இணையாக டிஷ் டிவியின் 30 லட்சம் வாடிக்கையாளர்களுக்கும், டாடா ஸ்கையின் 20 லட்ச வாடிக்கையாளர்களுக்கும் மேம்படுத்தப்பட்ட சேவையை வழங்கவேண்டிய கட்டாயம் உருவாகியுள்ளது. கிட்டத்தட்ட, புதிய நிறுவனங்களின் வரவால் டிஷ் டிவி, டாடா ஸ்கையின் அடிமடியிலேயே கைவைத்தாற்போல் ஆகிவிட்டது. தலையில் துண்டை போடாதகுறையாக இந்த நிறுவனங்கள் உள்ளன.
இந்தநிலையில், "டிடிஎச் சேவையில் தினசரி எங்களுக்கு ரூ.80 முதல் ரூ.90 லட்சம் வரை நஷ்டம் ஏற்படும். ஆனால் புதிதாக டிடிஎச் சேவையை தொடங்கும் நிறுவனங்களை ஒப்பிட்டால் இது மிகவும் குறைவாகும். 70 லட்சம் வாடிக்கையாளர்களைப் பிடித்துவிட்டால் இந்த நஷ்டத்தை விரைவில் ஈடுகட்டிவிடலாம்" என்று டிஷ் டிவி நிர்வாக இயக்குநர் ஜவஹர் கோயல் தெரிவித்தார்.
நடப்பாண்டுக்குள் 1 கோடி வாடிக்கையாளர்கள் டிடிஎச் சேவைக்குள் வந்துவிடுவார்கள் என்று டிடிஎச் நிறுவனங்கள் எதிர்பார்க்கின்றன. இதனால் 5 வருடங்களுக்குள் முதலீட்டைக் காப்பாற்றிவிடலாம் என்றாலும் செட்டாப் பாக்ஸ் விலை தவிர, விளம்பரம், வரி மற்றும் மார்க்கெட்டிங் செலவுகள் ஆகிய பிரச்னைகள் பூதாகரமாக வந்து பயமுறுத்துவதால் டிடிஎச் நிறுவனங்கள் கலக்கமடைந்துள்ளன.












Click it and Unblock the Notifications