சிறுத்தை தாக்கி சிறுமி பலி- ரூ.1 லட்சம் வழங்க உத்தரவு
சென்னை: சிறுத்தை தாக்கி இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதி வழங்கப்படும் என்று முதல்வர் கருணாநிதி தெரிவித்தார்.
சட்டசபையில் இன்று கேள்வி நேரம் முடிந்ததும் வால்பாறை பகுதியில் சிறுத்தை தாக்கி சிறுமி இறந்தது குறித்த கவன ஈர்ப்பு தீர்மானத்தை காங்கிரஸ் உறுப்பினர் கோவை தங்கம் கொண்டு வந்தார்.
அவர் கூறுகையில், வால்பாறை பகுதியில் கடந்த 2 ஆண்டுகளில் 3 பேர் சிறுத்தை தாக்குதலில் பலியாகியுள்ளனர். எனவே 20 இடங்களில் நிரந்தரமாக புலிக் கூண்டுகளை வைக்க வேண்டும். இதற்காக சட்டமன்ற உறுப்பினர் நிதியில் இருந்து நான் ரூ. 10 லட்சம் கொடுக்க தயாராக இருக்கிறேன்.
இறந்த சிறுமியின் குடும்பத்துக்கு கூடுதல் நிவாரண நிதி வழங்க வேண்டும் என்றார்.
இதையடுத்து பேசிய முதல்வர் கருணாநிதி, சிறுத்தை தாக்கி சிறுமி இறந்தது வேதனைக்குரியது. தாய் முன்னே செல்லும் போது பின்னால் வந்த குழந்தை, சிறுத்தையால் தாக்கப்பட்டு இறந்தது சிந்தையை கலங்க வைக்கிறது.
சிறுமியின் குடும்பத்துக்கு ரூ.1 லட்சம் நிவாரண நிதியாக வழங்கப்படும். உறுப்பினர் கோவை தங்கம் கொடுக்கும் ரூ.10 லட்சம் நிதியில் இருந்து கூண்டுகள் அமைக்கப்பட்டு அதற்கு தங்க கூண்டு' என்று பெயர் வைக்கப்படும் என்றார்.