தஞ்சையில் 8 அரவாணிகளை உயிரோடு கொளுத்த முயற்சி
தஞ்சாவூர்: தஞ்சையில் எட்டு அரவாணிகளை உயிரோடு தீவைத்துக் கொளுத்த முயற்சி நடந்துள்ளது. இதையடுத்து அரவாணிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
தஞ்சை, கீழ அலங்கம் வள்ளுவர் நகரில் அரவாணிகள் சங்கம் ஒன்று உள்ளது. இது குடிசையில் இயங்கி வருகிறது. இங்கு 30க்கும் மேற்பட்ட அரவாணிகள் தங்கியுள்ளனர்.
அங்கு தலைவி ரம்யா உள்பட 8 அரவாணிகள் இரவில் தூங்கிக் கொண்டிருந்தனர். அப்போது, அதிகாலையில் திடீரென குடிசையில் தீப்பற்றி எரிந்தது. இதையடுத்து 8 பேரும் அலறி அடித்தபடி வெளியே ஓடி உயிர் தப்பினர்.
இந்த தீவிபத்தில் உள்ளே இருந் செல்போன்கள், டிவி, பணம், துணிமணிகள் ஆகியவை எரிந்து நாசமாயின.
தீயணைப்புப் படையினர் விரைந்து வந்து தீயை அணைத்தனர். இது தங்களை தீவைத்து எரித்துக் கொல்ல நடந்த முயற்சி என்று கூறி அரவாணிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
பின்னர் மாவட்ட ஆட்சித் தலைவரை சந்தித்து புகார் மனுவையும் அவர்கள் கொடுத்தனர்.
அரவாணிகளை தீவைத்துக் கொல்ல முயன்றது யார் என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.