மதுரை இலந்தைகுளத்தில் சாப்ட்வேர் பூங்கா-விரைவில் அடிக்கல்
சென்னை: மதுரையில் சாப்ட்வேர் தொழில்நுட்பப் பூங்கா இலந்தைக்குளம் பகுதியில் அமையும் என முதல்வர் கருணாநிதி அறிவித்தார். இதற்கான அடிக்கல் நாட்டு விழா சில வாரங்களில் நடைபெறவுள்ளது.
சட்டசபையில் இன்று கேள்வி நேரத்தின் போது முதல்வர் அளித்த பதில்கள்:
செங்குட்டுவன் (திமுக): கிருஷ்ணகிரி மாவட்டத்தில் தொழில் நுட்பப்பூங்கா அமைக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா?
முதல்வர் கருணாநிதி: கிருஷ்ணகிரி மாவட்டம், ஒசூரில் தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைய விசுவநாதபுரம் கிராமத்தில் 172.19 ஏக்கர் நிலம், எல்காட் நிறுவனத்திற்கு உரிமை மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதில் சிறப்புப் பொருளாதார மண்டலம் அமைக்க அரசு உத்தேசித்துள்ளது. இதற்கென எல்காட் நிறுவனத்தால் மத்திய அரசிடம் உரிய விண்ணப்பம் செய்யப்பட்டு, மத்திய அரசின் முறையான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. இங்கு தகவல் தொழில்நுட்பப் பூங்கா அமைக்க எல்காட் நிறுவனத்தால் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
ரங்கநாதன் (திமுக): கடந்த 2007-2008ம் நிதியாண்டில் தமிழகத்தில் சாப்ட்வேர் ஏற்றுமதி வர்த்தகம் எந்த அளவுக்கு நடந்தது?
கருணாநிதிர்: மென்பொருள் ஏற்றுமதியைப் பொறுத்தவரையில் 2005-2006ம் ஆண்டில் 14,400 கோடி ரூபாய் அளவுக்கும், 2006-2007ம் ஆண்டில் 21,700 கோடி ரூபாய் அளவுக்கும் நடந்தது. இந்த ஆண்டு (2007-2008) இது 26,000 கோடி ரூபாயாக உயரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
நன்மாறன் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்ட்): மதுரையில் தகவல் தொழில்ட்பப் பூங்கா கேட்டபோது முதல்வர், மதுரைக்கு மாத்திரமல்லாமல் பல்வேறு மாவட்டங்களுக்கும் அறிவித்தார். அங்கெல்லாம் பூங்காக்கள் மணம் பரப்பத் தொடங்கி விட்டன. மதுரையில் விரைவில் அடிக்கல் நாட்டப்படும் என்று சென்ற முறை அறிவித்திருந்தார்கள். அது எப்போது நடைபெறும்?
கருணாநிதி: கோவை, திருச்சி, மதுரை, சேலம், நெல்லை ஆகிய நகரங்களில் தகவல் தொழில்நுட்பவியல் பூங்காக்கள் அமைப்பதற்கான நடவடிக்கைகள் எல்காட் நிறுவனத்தின் மூலமாக மேற்கொள்ளப்பட்டுள்ளது. அதிலே கோவை, சேலம், நெல்லை பூங்காக்களுக்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெற்றுள்ளது. திருச்சி, மதுரை ஆகிய நகரங்களிலும் தகவல் தொழில் நுட்பப் பூங்காக்கள் அமைய விரைவான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன.
மதுரையைப் பொறுத்தவரையில் சில வாரங்களில் அங்கே இந்த தொழில்நுட்பப் பூங்கா தொடங்குவதற்கான அடிக்கல் நாட்டுவிழா நடைபெறும்.
ஏ.கே.போஸ் (அதிமுக): மதுரையில் தொழில்நுட்பப் பூங்கா அமைப்பதாக முதல்வர் அறிவித்திருக்கிறார். அது அமையப் போவது இலந்தைக்குளம் பகுதியிலா அல்லது காமராஜர் பல்கலைக்கழகத்தின் அருகிலா என்பதை அறிய விரும்புகிறேன்.
கருணாநிதி: இலந்தைக்குளம் பகுதியில் தான் அமைக்க ஆய்வு நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. உறுப்பினருக்கு எந்தப் பகுதியில் என்று குறிப்பிட்டு அழைப்பு அனுப்பப்படும். தவறாமல் அவர் வருகை தர வேண்டுகிறேன்.












Click it and Unblock the Notifications