செங்கோட்டையில் கந்து வட்டிக் கொடுமை- பலர் தற்கொலை!
செங்கோட்டை: செங்கோட்டையில் தலைவிரித்தாடும் கந்துவட்டி கொடுமையால் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர். வட்டி கட்ட முடியாத பலர் தற்கொலை செய்துள்ளனர்.
நெல்லை மாவட்டத்தில் உள்ள செங்கோட்டையை சுற்றி 20க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இங்கு சுமார் 1 லட்சம் மக்கள் வசிக்கின்றனர். இவர்களில் பெரும்பாலானோர் விவசாயத்தை நம்பி வாழ்ந்து வருகின்றனர்.. இங்கு தொழில் வளம் என்று சொல்லிக் கொள்ளும் அளவிற்கு எந்த தொழிற்சாலையும் இல்லை. என்றாலும் கேரள மாநிலத்திலுள்ள ஆரியங்காவு, மற்றும் அச்சன்கோவில் ஆகிய கிராம மக்களும் பொருட்களை வாங்க செங்கோட்டைக்கு வருவதால் இரு மாநில மக்களின் பண்பாடு, கலாச்சாரத்தை காணலாம்.
பொருளாதார நிலையில் பின்தங்கி காணப்படும் செங்கோட்டை மக்கள் கந்து வட்டி கொடுமையில் சிக்கி தவிக்கின்றனர். இவர்களுடன் இங்குள்ள போக்குவரத்து கழகங்கள், ரயில் நிலையம், மருத்துவமனை, என ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கந்து வட்டிக்கு பணம் வாங்கி கொண்டு முழிக்கின்றனர்.
இந்த கந்து வட்டி கும்பல் கொடுத்த பணத்திற்கு பத்து மடங்காக வசூலித்து விடுகிறது. எடுத்துகாட்டாக ஒருவர் பத்தாயிரம் ரூபாய் வாங்கியுள்ளார் என்றால் இவர்கள் 1 லட்சம் வரை வசூல் செய்துவிடுகின்றனர். அரசு அலுவலகங்களில் வேலை பார்க்கும் சிலரே தங்களுடன் வேலை பார்ப்பவர்களுக்கு வட்டிக்கு பணம் கொடுத்து வசூலிக்கின்றனர். இவர்கள் பணத்தை கொடுக்கும் போதே அவர்களின் ஏடிஎம் கார்டை வாங்கி வைத்துக் கொள்கிறார்கள்.
இதன் பிறகு கடன் வாங்கியவர்களின் மாத சம்பளத்தை இவர்களே எடுத்துக் கொள்கிறார்கள். இதனால் மாத துவகத்திலேயே ஊழியர்கள் வெறுங்கையுடன் வீட்டுக்கு செல்கின்றனர். இந்த கொடுமை வெளிப்படையாக நடந்தாலும் அதனை தடுக்க வேண்டியவர்கள் கண்டுகொள்ளாததால் இந்த கும்பல் எங்கும் சிக்கி கொள்ளாமல் தப்பி வருகிறது.
கந்து வட்டியைக் கட்ட முடியாமர் பலர் தற்கொலை செய்து கொகண்டுள்ளனராமந். எனவே கந்து வட்டிக்காரர்களின் கொட்டத்தை அடக்கி, செங்கோட்டை பகுதி மக்களின் வாழ்க்கை தரத்தை உயர்ந்த அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை இப்பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையாகும்.