விந்து சுரப்பி புற்றுநோய்க்கு புதிய மருந்து!
லண்டன்: விந்துச் சுரப்பி புற்றுநோயைக் கட்டுப்படுத்தும் மருந்தை அமெரிக்க மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர்.
உடலில் கொலஸ்டிராலை குறைக்கும் 'ஸ்டேடின் லிபிடர்' மற்றும் ஆர்த்ரைடீஸ் எனும் எலும்பு தேய்மான வலியைப் போக்குவதற்கான 'செலிபிரெக்ஸ்' ரக மருந்துகளை கலந்து கொடுத்தால் விந்து சுரப்பியில் ஏற்படும் புரோஸ்டேட் கேன்சர் என்ற புற்றுநோயைக் கட்டுப்படுத்த முடியும் என்று அமெரிக்க விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
எலிகள் மீது செய்யப்பட்ட பரிசோதனையில் ஆரம்பநிலை புற்று நோயின்போது இந்த கலப்பு மருந்து வீரியமாகச் செயல்படுவதை கண்டறிந்தனர்.
அமெரிக்காவின் நியூஜெர்சி ரட்கர்ஸ் பல்கலைக்கழகத்தில் இந்த ஆராய்ச்சியை மேற்கொண்ட விஞ்ஞானி ஆலன் கோனி கூறுகையில், இந்த ஆராய்ச்சியானால் பல மனித உயிர்களைக் காப்பாற்றமுடியும் என்ற நம்பிக்கை ஏற்பட்டுள்ளது.
சோதனைக்கூட முயற்சிகள் திருப்தியாக இருக்கும்பட்சத்தில் அடுத்த 5 ஆண்டுகளில் விந்து சுரப்பி புற்றுநோய்க்கான புதிய மருந்து தயாராகிவிடும். தற்போது பயன்படுத்தப்படும் கலப்பு மருந்தினால் புற்றுநோய் பரவுவதைத் தடுக்கமுடியும் என்று உறுதிப்படுத்தினால் போதும். நோய் முற்றிப்போகுமோ என இனி கவலைப்படத் தேவையிருக்காது என்றார்.
அவருடன் பணியாற்றிய பேராசிரியர் ஜீ செங் கூறுகையில், லிபிடர் மற்றும் செலிபிராக்ஸ் மருந்தை குறைந்த அளவில் கலந்து பரிசோதித்தபோது முற்றியநிலை நோய் புற்றுக்கட்டிகளை எதிர்க்கும் திறன் உருவாகியதை கண்டறிந்தோம் என்றார்.
உலக அளவில் பல ஆண்டுகளாக பல்லாயிரம் கோடி ரூபாய்களை ஏப்பம்விட்டுவிட்ட புற்றுநோய் தடுப்பு ஆராய்ச்சிகள் முடிவில்லாமல் தொடர்கின்றன. 50 வயதைக் கடந்த ஆண்களை அச்சுறுத்தும் நோயாக விந்துச்சுரப்பி புற்றுநோய் உருவெடுத்து வரும் நிலையில் தற்போது அமெரிக்க விஞ்ஞானிகள் வெளியிட்டுள்ள தகவல் சற்றே ஆறுதலாக அமைகிறது.












Click it and Unblock the Notifications